அடம்பிடிக்கும் எம்எல்ஏக்கள்.. ஷிண்டேக்கு புதிய தலைவலி.. குஷியில் உத்தவ்..மராட்டிய அரசியலில் பரபரப்பு
மும்பை: அமைச்சரவையில் இடம் கேட்டு எம்.எல்.ஏக்கள் அடம்பிடிக்க தொடங்கியுள்ளதால், ஏக்னாத் ஷிண்டேக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது. மேலும் ஷிண்டே அணியை சேர்ந்த எம் எல் ஏ உத்தவ் தாக்கரேவை பாராட்டி டுவிட் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.
தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா பாஜனதாவின் கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஆட்சி அமைந்துள்ளது. ஆனால் அரசு பதவி ஏற்று 40 நாட்களுக்கு பிறகு தான் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.
சஞ்சய் ராவத் எம்.பி கைது எதிரொலி! மும்பையில் பெரிய அளவில் போராட்டம்.. உத்தவ் சிவசேனா அணி அறிவிப்பு
இலாக்கா ஒதுக்கீட்டில் மோதல்
எனினும் அமைச்சர்களுக்கு இலாக்கா ஒதுக்கப்படவில்லை. மகாராஷ்டிராவில் 43 பேர் வரை அமைச்சர்களாக பதவி வகிக்க முடியும். ஆனால் முதல்வர் ஏக்னாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிசை சேர்த்து தற்போது 20 பேர் மட்டுமே அமைச்சர்களாக உள்ளனர். நீண்ட இழுபறிக்குப் பின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டாலும், இலாகாகக்கள் ஒதுக்கப்படாமல் இருப்பதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. குறிப்பாக இலாக்கா ஒதுக்கீடில் மோதல் நடந்து வருவதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
சஞ்சய் சிர்ஷத் டுவிட்
அமைச்சரவையில் இடம் கொடுப்பதில் எம்.எல்.ஏக்களுக்கு அதிருப்தி ஏற்படும் என்றும் இதனால், ஏக்நாத் ஷிண்டே தனது அரசை எப்படி காப்பாற்ற போகிறார்? என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன. இந்த நிலையில் ஏக்நாத் ஷிண்டே அணியில் உள்ள எம்.எல்.ஏ சஞ்சய் சிர்ஷத், உத்தவ் தாக்கரேவை பாராட்டி தனது ட்விட்டரில் பதிவிட்டது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறிது நேரத்தில் இந்த ட்விட் பதிவை சஞ்சய் சிர்ஷத் அழித்துவிட்டாலும் எதிர்க்கட்சிகள் இதை விடாப்படியாய் பிடித்துக்கொண்டு விமர்சித்து வருகின்றன.
ஆழ் மனது கருத்து
எம்.எல்.ஏ சஞ்ச்ய் சிர்ஷத்தின் ட்விட் பதிவு தொழில்நுட்ப கோளாறு அல்ல.. அது ஆழ்மனது கருத்து என்று தேசியவாத காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் மகேஷ் தப்சே இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறும்போது, "மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்தது தவறு என்பதை பல எம்.எல்.ஏக்கள் உணர தொடங்கி விட்டதையே சஞ்சய் சிர்ஷத்தின் ட்விட் பதிவு பிரதிபலிக்கிறது. தொழில்நுட்ப கோளாறு என்று சஞ்சய் சிர்ஷத் கூறுகிறார். ஆனால், அவரது முகபாவனையும் உடல் மொழியும் பல விஷயங்களை பேசுகின்றன' என்றார்.
வாக்காளர்கள் கவனித்து கொண்டுதான்..
இது குறித்து மகேஷ் தப்சே மேலும் கூறுகையில், "முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும் தேவேந்திர பட்னாவிசும் சதி செய்து மகா விகாஸ் கூட்டணி அரசை கவிழ்த்தனர். அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்பது உள்பட ஏராளமான ஆசையை அவர்கள் காட்டியிருப்பார்கள். ஆனால், அமைச்சரவை பொறுப்பு என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் சிர்ஷத் மற்றும் பச்சு கடு உள்பட பல எம்.எல்.ஏக்கள் கலகக்குரல்களை எழுப்பியுள்ளனர். இங்கு நடக்கும் அனைத்தையும் வாக்காளர்கள் கவனித்து கொண்டுதான் இருக்கின்றனர்" என்று தெசியவாத காங்கிரஸ் செய்தி தொட்ர்பாளர் பேசினார்.
அப்படி என்ன தான் பதிவிட்டார்?
அவுரங்கபாத் தொகுதி எம்.எல்.ஏவான சிர்ஷத் நேற்று முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவை பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டார். அந்த பதிவில், உத்தவ் தாக்கரே குடும்பத்தின் தலைவர் என்றும் சட்டசபையில் உத்தவ் தாக்கரே இருப்பது போன்ற கிளிப் ஒன்றையும் பதிவிட்டு இருந்தார். சுமார் 10 நிமிடங்கள் கழித்து இந்த ட்விட்டை சிர்ஷத் அழித்துவிட்டார். பின்னர் தனது சர்ச்சைக்குரிய ட்விட் குறித்து விளக்கம் அளித்த சிர்ஷத், வேண்டும் என்றே இந்த ட்விட்டை பதிவிடவில்லை என்றும் மார்ச் மாதத்தில் நான் போட்ட இந்த ட்விட் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் வந்திருப்பதாகவும் தனக்கு இது பற்றி எதுவும் தெரியாது, நான் ஏக்நாத் ஷிண்டேவுடன் முழுமையாக இருப்பதாகவும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.