மும்பையில் சைபர் குற்றங்களை விசாரிக்க தனி போலீஸ் நிலையம்.. 10 மாடிகளை கொண்ட வளாகமாக அமைகிறது
மும்பை: மும்பையில் சைபர் குற்றங்களை விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட தனி போலீஸ் பிரிவிற்கென, பிரத்யேகமாக முதல் காவல் நிலையம் கட்டப்பட உள்ளது.
இந்த காவல் நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, சமீபத்தில் மாராட்டிய மாநில முதல்வர் தேவேந்திர பட்னவாவிஸ் தலைமையில் நடந்தது. இவ்விழாவில் பங்கேற்ற பட்னாவிஸ் அடிக்கல்லை நாட்டினார். சைபர் குற்றப்பிரிவு போலீஸாருக்கென மும்பையில் கட்டப்பட உள்ள முதல் போலீஸ் நிலையம் இதுவாகும்.
சைபர் குற்றங்களை விசாரிக்க புதிதாக கட்டப்பட உள்ள காவல் நிலையம் 10 மாடிகளை கொண்ட வளாகமாக கட்டப்பட உள்ளது. இதில் சைபர் குற்றங்களை ஆய்வு செய்வதற்கான சிறப்பு ஆய்வுக்கூடம், போலீஸ் நிலையம், பயிற்சி மையம் மற்றும் மூத்த அதிகாரிகள் தங்குவதற்கான வீடுகள் ஆகியவை இடம்பெற உள்ளது.
கட்டிடத்தின் முதல் 6 மாடிகளில் ஆய்வுக்கூடம்,போலீஸ் நிலையம், பயிற்சி மையம் உள்ளிட்டவை அமைக்கப்படும். கடைசி 4 மாடிகளில் அதிகாரிகளுக்கான வீடுகள் அமைக்கப்பட உள்ளது.
கரும்பு தோட்டத்தில் நாசமாக்கப்பட்ட பெண்கள்..100க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் சிக்கியதால் பரபரப்பு
மும்பை நகரில் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி கொண்டே போகிறது. இதனால் சைபர் குற்றப்பிரிவு போலீஸாருக்கென தனி போலீஸ் நிலையம் ஒன்றை அமைப்பது என, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது தான்இதற்கான கட்டிடத்தை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
மும்பையில் நடப்பாண்டை பொருத்த வரை கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மோசடி 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த ஜனவரி முதல் 498 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த மாதம் வரை 75 வழக்குகளில் தான் துப்பு துலங்கியுள்ளது. கடந்த ஆண்டு 1362 சைபர் குற்ற வழக்குகள் பதிவானது. இதில் 260 வழக்குகளில் மட்டுமே துப்பு துலங்கியது.
இதனிடையே புதிய காவல் நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதல்வர் பட்னாவிஸ், தற்போது ஆன்லைன் மூலம் பல மோசடிகளும் குற்றங்களும் நடைபெறுகின்றன. இதனை தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இது போன்ற சைபர் குற்றங்களால் புதிய சவால்கள் ஏற்படலாம். இந்த சவால்களையெல்லாம் முறியடிக்கும் நோக்கில் தான், அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒருகட்டமாக மாநிலம் முழுவதும் 40 சைபர் குற்ற ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்படும் தொழில்நுட்ப ரீதியாக நமது காவல்துறை வலிமைமிக்கதாக உருவாக்கப்பட வேண்டும்.
இதற்காக ஆயிரம் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.