மகாராஷ்டிராவில் ட்விஸ்ட்.. துணை முதல்வரானார் தேவேந்திர பட்னாவிஸ்.. இது லிஸ்ட்லயே இல்லையே
மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.
மும்பை: மகாராஷ்டிரா முதல்வராக ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவி ஏற்றுக்கொண்ட நிலையில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டுள்ளார். மகாராஷ்டிரா அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.
மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கூட்டணிக்கு எதிராக 48 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். இதனால் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது.
மகாராஷ்டிரா முதல்வர் நாற்காலி.. 2019ல் விட்டு கொடுக்க மறுத்த பாஜக.. இப்போது ‛ஒகே’ சொன்னது ஏன்?
இதையடுத்து மகாராஷ்டிரா சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார்.
உச்சநீதிமன்றம்
16 அதிருப்தி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் வழக்கு நிலுவையில் உள்ளதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தின் கதவை தட்டினார் உத்தவ் தாக்கரே. உச்சநீதிமன்றமோ, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதிக்க மறுத்துவிட்டது.
உத்தவ் தாக்கரே ராஜினாமா
இதனால் நேற்று இரவு முதல்வர் உத்தவ் தாக்கரே தமது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். முன்னதாக அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் உத்தவ் தாக்கரே நன்றி தெரிவித்தார். இதனையடுத்து நள்ளிரவில் ஆளுநர் கோஷ்யாரியை சந்தித்து தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். அதே கையோடு நள்ளிரவில் கோவில்களுக்கும் சென்று வழிபாடு நடத்தினார் உத்தவ் தாக்கரே.
முதல்வரான ஏக்நாத் ஷிண்டே
உத்தவ் தாக்கரேவின் ராஜினாமாவை இனிப்புகள் வழங்கி கொண்டாடியது பாஜக. மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரும் என்றும் முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உத்தவ் தாக்கரே அரசை கவிழ்த்த அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்துள்ளது பாஜக.
தேவேந்திர பட்னாவிஸ்
நான் அரசாங்கத்தில் இருந்து விலகி, அது சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வேன் என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறினார். ஆனால், இந்த அறிவிப்பு வெளியான உடனேயே,பாஜக தலைவர் ஜே.பி. நட்டா கூறுகையில், 'மகாராஷ்டிராவின் துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பொறுப்பேற்க வேண்டும் என, பாஜகவின் மத்திய தலைமை கூறியுள்ளது.. அவரிடம் தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் நிமிடத்திற்கு நிமிடம் திடீர் திருப்பங்கள் அரங்கேறி வருவதால் பரபரப்பு அதிகரித்தது.
துணை முதல்வராக பதவியேற்பு
இந்த நிலையில் இரவு 7.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார் தேவேந்திர பட்னாவிஸ். பாஜக தொண்டர்கள் பாரத் மாதா கி ஜே என உற்சாக முழக்கமிட்டனர். மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் பரபரப்பான நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. நேற்றிரவு உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து புதிய முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிசும் பதவியேற்றுக்கொண்டுள்ளனர்.