நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி.. பெரும்பான்மையை நிரூபித்தார் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே!
மும்பை: மகாராஷ்டிராவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்று பெரும்பான்மையை நிரூபித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சிக்கு எதிராக திடீரென சிவசேனா எம்எல்ஏ-க்கள் போர்க்கொடி தூக்கினர். இறுதிவரை போராடிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட்ட பின்னர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து மகாராஷ்டிரா முதலமைச்சராக சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ்-ம் பதவியேற்றனர்.
இதையடுத்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார். பின்னர் மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் 2 நாட்கள் சிறப்புக் கூட்டத் தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மகாராஷ்டிரா சட்டசபை சிறப்புக் கூட்டத்தின் முதல் நாளான நேற்று சபாநாயகருக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் அதிருப்தி சிவசேனா-பாஜக கூட்டணி சார்பாக பாஜக எம்எல்ஏ ராகுல் நர்வேகர், சிவசேனா கூட்டணி சார்பாக சிவசேனா எம்எல்ஏ ராஜன் சால்வி போட்டியிட்டனர்.
இந்தத் தேர்தலில் பாஜகவின் நர்வேகர் மொத்தம் 164 வாக்குகள் பெற்று புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். சிவசேனாவின் ராஜன் சால்விக்கு 107 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. சபாநாயகர் தேர்தலில் வென்ற ராகுல் நர்வேகருக்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் மொத்த எண்ணிக்கை 288 ஆகும். அதில் ஒரு உறுப்பினர் இறந்ததால், தற்போதைய பலம் 287ஆக உள்ளது. அதில் பெரும்பான்மைக்கு 144 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ-க்கள்- பாஜக எம்எல்ஏ -க்கள் என கூட்டணியாக 20 வாக்குகள் கூடுதலாக பெற்று சபாநாயகர் தேர்தலில் ஏக்நாத் ஷிண்டே அணியின் ராகுல் நர்வேகர் வெற்றிபெற்றார்.
இந்தநிலையில் இன்று மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் ஏக்நாத் ஷிண்டே அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் பெரும்பான்மைக்கு 144 வாக்குகள் மட்டுமே தேவை என்ற நிலையில், 164 வாக்குகள் பெற்று பெரும்பான்மையை ஏக்நாத் ஷிண்டே அரசு நிரூபித்துள்ளது.
இந்த வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவாக 164 வாக்குகளும், எதிராக 99 வாக்குகளும் பதிவாகின. சமாஜ்வாதி மற்றும் ஏஐஎம்ஐஎம் கட்சிகளைச் சேர்ந்த மூன்று எம்எல்ஏ-க்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. கடைசி நேரத்தில் உத்தவ் தாக்கரே அணியில் இருந்த ஷ்யாம்சுந்தர் ஷிண்டே ஏக்நாத் ஷிண்டே ஆதரவளித்தார். ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவாக சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ-க்கள் 40 பேரும், பாஜக எம்எல்ஏ-க்கள் 106 பேரும், சுயேட்சை எம்எல்ஏ-க்கள் 18 பேரும் வாக்களித்துள்ளனர்.