"சிங்கங்கள்" கூட குதிக்காத தேர்தல் களம்.. முதல் முறையாக களம் காணும் "குட்டி" தாக்கரே!
மும்பை: சிவசேனா தலைவர் மறைந்த பால் தாக்கரே, அவரது மகன் உத்தவ் தாக்கரே, தம்பி மகன் ராஜ் தாக்கரே என யாருமே மகாராஷ்டிர தேர்தல்களில் ஒருமுறை கூட போட்டியிட்டதில்லை. இந்த நிலையில் முதல் முறையாக தாக்கரே குடும்பத்திலிருந்து ஒரு வாரிசு தேர்தல் களத்தில் இறக்கி விடப்படவுள்ளார்.
தேர்தல் களத்தில் மக்களை சந்திக்காமலேயே அரசியலில் உச்சம் பெற்றவர்கள், ஆதிக்கம் செலுத்தியவர்கள் நமது நாட்டில் நிறையப் பேர் உள்ளனர். மூப்பனார் குடும்பம் தமிழகத்தில் உள்ளது போல மகாராஷ்டிராவில் சிவசேனா குடும்பம்.
பால் தாக்கரே குடும்பத்திலிருந்து யாருமே தேர்தலில் போட்டியிட்டதில்லை. தற்போது முதல் முறையாக சிவசேனா தலைவராக உள்ள உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே தேர்தலில் போட்டியிடவுள்ளார். வரும் மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் ஒர்லி தொகுதியிலிருந்து அவர் போட்டியிடப் போகிறார்.
சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபசி தஹில் ரமாணி மீது முறைகேடு புகார்.. சிபிஐ விசாரிக்க உத்தரவு
தெற்கு மும்பையில் உள்ள சட்டசபைத் தொகுதி ஒர்லி. அடுத்த மாதம் மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆதித்யா தாக்கரே சிவசேனா வேட்பாளராக இங்கு களம் இறங்கவுள்ளார். தற்போது சிவசேனா கட்சியின் இளைஞர் அணி தலைவராக இருக்கிறார் ஆதித்யா தாக்கரே.
ஆதித்யாவின் போட்டி குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்குத் தரப்படும் ஏபி விண்ணப்பம் ஆதித்யாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாம். தற்போது ஒர்லி தொகுதியில் சிவசேனா சார்பில் எம்எல்ஏவாக இருப்பவர் சுனில் ஷிண்டே. இவர் தாக்கரே குடும்பத்துக்கு வழி விடுகிறார்.
மும்பையிலேயே ஒர்லி தான் ஆதித்யாவுக்கு பாதுகாப்பானது என்று சிவசேனா கருதுகிறது. இதனால்தான் இத்தொகுதியில் அவரை நிறுத்தவுள்ளனர். மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சச்சின் அஹிர் சமீபத்தில் சிவசேனாவில் இணைந்துள்ளார். இதவும் சிவசேனாவின் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளதாக சொல்கிறார்கள்.
மறுபக்கம் இதுவரை சிவசேனா - பாஜகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து இதுவரை முறைப்படி தகவல்கள் வெளியிடப்படாமல் உள்ளது. ஆனால் இரு கட்சிகளுக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறப்படுகிறது. பால்தாக்கரே குடும்பத்திலிருந்து யாரும் இதுவரை தேர்தலில் போட்டியிடாத நிலையில் முதல் முறையாக பால் தாக்கரேவின் பேரன் களம் குதிப்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.