பீமா கோரேகான் : அம்பேத்கர் பிறந்த நாளில் சிறைக்கு அனுப்பப்பட்ட அம்பேத்கர் உறவினர் ஆனந்த் டெல்டும்டே
மும்பை: பீமா கோரேகான் வழக்கில் சமூக ஆர்வலரும் அண்ணல் அம்பேத்கர் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருமான ஆனந்த் டெல்டும்டே நீதிமன்றத்தில் சரணடைந்தார். அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் 14-ந் தேதியன்று அவரது குடும்பத்தை சேர்ந்த ஆனந்த் டெல்டும்டே சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார் என்பது அரசியல் பார்வையாளர்களின் விமர்சனம்.
மகாராஷ்டிராவில் 2017-ம் ஆண்டு டிசம்பர் 31, 2018-ம் ஆண்டு ஜனவரி 1 ஆகிய நாட்களில் எல்கார் பரிஷத் மற்றும் பீமா கோரேகான் ஆகியவற்றில் நடந்த வன்முறைகள் தொடர்பாக ஏற்கனவே பல சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது ஆனந்த் டெல்டும்டே வீடும் சோதனையிடப்பட்டது.
பின்னர் பீமா கோரேகான் வன்முறையில் ஆனந்த் டெல்டும்டேவுக்கு தொடர்பிருக்கிறது என மகாராஷ்டிரா போலீசார் கூறி வந்தனர். இதை எதிர்த்து நீதிமன்றங்களில் ஆனந்த் டெல்டும்டே வழக்குகளும் தொடர்ந்தார்.
பின்னர் உச்சநீதிமன்றத்தில் கடைசியாக நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது ஆனந்த் டெல்டும்டே,. மற்றொரு சமூக செயற்பாட்டாளர் கவுதம் நவ்லாகா ஆகியோரது முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் இருவரும் நீதிமன்றத்தில் சரணடையவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை ஏற்று ஆனந்த் டெல்டும்டேவும் கவுதம் நவ்லாகாவும் மும்பை மற்றும் டெல்லி நீதிமன்றங்களில் சரணடைந்தனர். வரும் 18-ந் தேதி ஆனந்த் டெல்டும்டேவை காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு ஏஜென்சிக்கு (என்.ஐ.ஏ) மும்பை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அரசியல் சாசன சிற்பியான அண்ணல் அம்பேத்கரின் பேத்தியை திருமணம் செய்து கொண்டவர் ஆனந்த் டெல்டும்டே. அம்பேத்கரின் பிறந்த நாளான நேற்று அம்பேத்கரின் உறவினரான ஆனந்த் டெல்டும்டே சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது பெரும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.