2 வருடமாக சிறை வாசம்.. 81 வயதாகும் சமூக ஆர்வலர் வரவர ராவுக்கு மும்பை ஹைகோர்ட் ஜாமீன் மறுப்பு
மும்பை: பீமா-கொரேகான் வன்முறை வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள கவிஞரும்-சமூக ஆர்வலருமான, வரவர ராவுக்கு மும்பை ஹைகோர்ட் ஜாமீன் மறுத்துள்ளது. அதேநேரம், மருத்துவர்கள் குழு வீடியோ மூலம் சிகிச்சையளிக்க அனுமதி வழங்கியுள்ளது.
வரவர ராவ், 2018ம் ஆண்டு, ஜனவரியில் மகாராஷ்டிரா போலீசாரால் கைது செய்யப்பட்டார். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழும் இவர் குற்றம் சாட்டப்பட்டார்.
இந்த சட்டத்தின்கீழ், பல ஆண்டுகளாக விசாரணையின்றி கைது செய்து வைக்க முடியும். வரவர ராவ் விசாரணையும், 2 வருடங்களாக நடைபெறவேயில்லை.
கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையம்.. எப்படி பரபரப்பா இருந்த இடம்.. இப்போ ஆளே இல்லாம.. மனசே கலங்குது- வீடியோ
மும்பை ஹைகோர்ட்
உடல்நலக்குறைவு கொண்ட ஒரு சீனியர் சிட்டிசனை தொடர்ந்து சிறையில் அடைப்பது, வாழ்க்கை உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் அரசியலமைப்பின் 21 வது பிரிவை மீறுவதாகும் என்று அவரது குடும்பத்தினர் சார்பில் மும்பை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வீடியோ சிகிச்சை
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அடுத்த கட்ட விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்த ஹைகோர்ட், வரவர ராவ் உடல்நிலை மோசமாக இருப்பதால், ஒரு தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் வீடியோ மூலம் அவருக்கு சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். மும்பைக்கு அருகிலுள்ள தலோஜா சிறையில் வரவர ராவ் அடைக்கப்பட்டு உள்ளார், இவருடன் இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஸ்டான் சுவாமியும் உள்ளார். வரவர ராவ் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்படுவதை, தனது வழக்கறிஞர்களை அழைத்து ஸ்டான் சுவாமிதான் தெரிவித்திருந்தார்.
வன்முறை சம்பவம்
இந்த வழக்கு, தேசிய புலனாய்வு அமைப்பால் (என்ஐஏ) விசாரிக்கப்பட்டு வருகிறது. 2017ம் ஆண்டு, டிசம்பர் 31ம் தேதி, புனேவில் நடைபெற்ற எல்கர் பரிஷத் மாநாட்டில் வன்முறையை தூண்டும் வகையில் வரவர ராவ் பேசினார் என்பது குற்றச்சாட்டு. மறுநாள் கொரேகான்-பீமா போர் நினைவிடம் அருகே நடைபெற்ற வன்முறைக்கு இந்த பேச்சு காரணம் என்கிறது காவல்துறை.
அர்னாப் கோஸ்வாமி
வரவர ராவ் மற்றும் 9 சமூக ஆர்வலர்கள் மாவோயிஸ்டுகளுடன் இணைந்து வன்முறை நடத்த திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டனர். ஆனால், வரவர ராவ் தலைமையிலான, புரட்சிகர எழுத்தாளர்களின் சங்கமான "வீரசம்" இந்த குற்றச்சாட்டை கடுமையாக மறுத்துள்ளது. வரவர ராவ் அடைக்கப்பட்டுள்ள தலோஜா சிறை சமீபத்தில் திடீர் புகழடைந்தது. இதற்கு காரணம் ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, தற்கொலைக்கு தூண்டிய வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு பின்னர் இங்குதான் அடைக்கப்பட்டிருந்தார். அர்னாப் கோஸ்வாமிக்கு நேற்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.