இடதுசாரி சமூக செயற்பாட்டாளர் வரவர ராவுக்கு மும்பை சிறையில் கொரோனா- விடுதலை செய்ய ப.சி. கோரிக்கை
மும்பை: பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடதுசாரி சமூக செயற்பாட்டாளர் கவிஞர் வரவர ராவுக்கு (வயது 81) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வரவர ராவை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் பீமா கோரேகானில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் வன்முறை ஏற்பட்டது. இது தொடர்பாக வரவர ராவ் உட்பட 11 சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மும்பையில் தலேஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ள வரவர ராவின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்; அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
தமிழக அமைச்சர் நிலோபர் கபீலுக்கு கொரொனா தொற்று உறுதி
வரவர ராவுக்கு கொரோனா உறுதி
இதனிடையே வரவர ராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மும்பை ஜேஜே மருத்துவமனை டீன் ரஞ்சித் மங்கேஷ்வர் கூறுகையில், திங்கள்கிழமை இரவு வரவர ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளார் என்றார்.
ப.சி. ட்வீட்
ஏற்கனவே வரவர ராவ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை என்.ஐ.ஏ. நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து மும்பை உயர்நீதிமன்றத்தில் வரவர ராவ் மேல்முறையீடு செய்துள்ளார். இம்மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது. இதனிடையே வரவர ராவை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.
பீமா கோரேகான் என்ன?
மகாராஷ்டிராவில் வீர சிவாஜிக்குப் பின்னர் பேஷ்வா பிராமணர்கள் ஆட்சி நடத்தி வந்தனர். 1818-ல் பேஷ்வா படைக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே யுத்தம் நடைபெற்றது. இதில் பேஷ்வாக்கள் ஆட்சியில் ஒடுக்கப்பட்ட மகர் இன மக்கள் ஆங்கிலேயருடன் இணைந்து போரிட்டனர். இதில் 25,000 பேஷ்வா படையினர் கொல்லப்பட்டு ஆங்கிலேயர்- மகர் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. இதன் நினைவாக பீமா கோரேகானில் வெற்றித் தூண் நிறுவப்பட்டிருக்கிறது.
வரவர ராவ் உள்ளிட்டோர் கைது
இந்த யுத்தத்தின் 200-வது ஆண்டு விழாவை கொண்டாட ஒடுக்கப்பட்ட மக்கள் பீமா கோரேகான் சென்றனர். அப்போது பேஷ்வா ஆதரவாளர்களால் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இது தொடர்பான வழக்கில்தான் வரவர ராவ் உள்ளிட்ட சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைகப்பட்டுள்ளனர்.