ஹைதராபாத்தில் சாலையோர கடையில் ஜல்லிக்கரண்டியும் கையுமா சோனுசூட்.. காரணத்தை கேட்டா அதிர்ந்துடுவீங்க!
மும்பை: சாலையோர உணவகம் நடத்தும் ரசிகருக்கு சர்பிரைஸ் கொடுத்த நடிகர் சோனு சூட் சமையலுக்கும் உதவி செய்து அங்கு சாப்பிட்டு ரசிகரை கவுரவப்படுத்தினார்.
இந்தி, தமிழ் என பல மொழிகளில் தனது அபார நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். பல படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த இவரது தயாளு குணம் இந்த கொரோனா லாக்டவுனில் அப்பட்டமாக வெளிப்பட்டது.
பெரிய பெரிய ஸ்டார்களே செய்யாத நற்காரியங்களை எல்லாம் செய்து ரியல் ஹீரோ என மக்கள் மத்தியில் பெயரெடுத்தவர் சோனுசூட். இதனால் இவரது ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.
கரிசனம்
உப்பிட்டவர்களுக்கு உதவி மட்டும் செய்யவில்லை, தனது கரிசனத்தையும் காட்டினார் சோனுசூட். இவரை இந்த உலகையும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் காக்க வந்தவர் என அழைக்கிறார்கள். இவர் ஹைதராபாத்தில் தனது தீவிர ரசிகரின் சோனுசூட் பாஸ்ட்புட் ஸ்டால் எனும் சாலையோர உணவுக் கடைக்கு சென்று அவரை மகிழ்ச்சிப்படுத்தினார்.
அனில்
அவரது வருகையால் அதிர்ச்சி அடைந்த கடைக்காரர் அனில், சோனுவுக்கு மாலை அணிவித்து வரவேற்றார். பின்னர் தனது கடையில் உள்ள மெனு புத்தகத்தை காண்பித்தார். பின்னர் வாடிக்கையாளர்கள் வரவர அனிலுடன் சேர்ந்து சோனு சூட்டும் உதவி செய்தார். இதுகுறித்து சோனு கூறுகையில் சமூகவலைதளங்களில் அனிலின் கடை அமைப்பை பார்த்துள்ளேன்.
உணவகம் அமைத்தல்
இதனால் நேரடியாக வந்து அவர் கடை உணவுகளை உண்ண விரும்பினேன். அது இன்று (நேற்று) தான் நிறைவேறியது. நான் முட்டை பிரைடு ரைஸும், மஞ்சூரியனும் சாப்பிட்டேன் என்றார். இதுகுறித்து அனில் கூறுகையில் சோனுவின் சமூக பணிகளால் நான் பெரிதும் கவரப்பட்டேன். அதுதான் உணவகத்தை அமைக்க ஊக்கத்தை அளித்தது என்றார்.
சித்திப்பேட்டை கிராமம்
சோனு சூட்டின் பணியை பாராட்டி தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டையில் ரசிகர்கள் சேர்ந்து சோனு சூட்டிற்கு சிலை வைத்துள்ளனர். இதுகுறித்து சோனு கூறுகையில், சித்திப்பேட்டை மக்களுக்கு நன்றி. இது போன்ற அன்பை எனக்கு காண்பிப்பார்கள் என நான் நினைக்கவில்லை. நான் நிச்சயம் அந்த கிராமத்திற்கு விஜயம் செய்வேன். நான் கடவுள் இல்லை, சாதாரண மனிதர் என்றார் சோனு.