மறைந்த சுஷாந்த்துக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்ததா? மணப்பெண் யார்? உறவினர் கூறியது என்ன?
மும்பை: மறைந்த நடிகர் சுஷாந்துக்கு நவம்பர் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தாக அவரது உறவினர் ஒருவர் தெரிவித்தார். ஆனால் மணப்பெண் யார் என்பதை அவர் குறிப்பிடவில்லை.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் (34 வயது), பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் குடும்பத்தில் பிறந்த இவர். நேற்று தற்கொலை செய்து கொண்டார். இவர் பாலிவுட்டில் கை போ சே, சுதேசி ரொமான்ஸ், டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்ஷி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
எனினும் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்று (MS Dhoni: The Untold Story) திரைப்படத்தில் நடித்த பின்னரே இந்தியா முழுவதும் பெரும் புகழ் பெற்றார். இவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலைக்கான காரணங்கள் இதுவரை தெரிய வரவில்லை.
பெண் மேனேஜர் தற்கொலைக்கும் சுஷாந்த் சிங் மரணத்திற்கும் தொடர்பா? என்ன நடந்தது?.. போலீஸின் விளக்கம்!
தற்கொலை
கடந்த இரண்டு மாதங்களாக சுஷாந்த்சிங் கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்னர்தான் அவரது பெண் மேனேஜர் 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அடுத்த சில நாட்களில் சுஷாந்த்சிங் நேற்று மும்பையில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் முழு நாட்டையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. சுஷாந்த் தனது நடிப்பு திறமைக்காக மட்டுமல்ல, அவரது பணிவு, நட்பு மற்றும் உறவுகளுக்காகவும் நேசிக்கப்பட்டார்.
பீகார் அரசியல் குடும்பம்
சுஷாந்த் சிங் பீகாரில் பீகாரில் செல்வாக்குமிக்க அரசியல் குடும்பத்தில் பிறந்தவர். பீகாரின் மோகமா சட்டசபை தொகுதியில் சுஷாந்த்சிங்கின் சகோதரர் நீரஜ் குமார் சிங் பாப்லு, 2005, 2010 மற்றும் 2015 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றி பெற்றவர். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் நீரஜ்குமார். பின்னர் 12 அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் நீரஜ்குமார் பாஜகவில் இணைந்தவர் ஆவார்.
உறவினர்கள் சந்தேகம்
இந்நிலையில் சுஷாந்த் சிங் மறைவு தற்கொலையாக இருக்க வாய்ப்பு இல்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று உறவினர்கள் சந்தேகம் தெரிவிக்கிறார்கள். காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஆனால் போலீசார் தற்கொலையாகவே இருக்க வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள். தற்கொலை என்றால் அதற்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை.
Recommended Video
மணப்பெண் யார்
இதற்கிடையே வரும் நவம்பர் மாதம் சுஷாந்துக்கு திருமணம் நடப்பதாக நிச்சயிக்கப்பட்டிருந்தாக உறவினர் ஒருவர் கூறினார். ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், வரும் நவம்பர் மாதம் சுஷாந்துக்கு மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மிக நெருங்கிய நண்பர்களையும் உறவினர்களையும் மட்டுமே அழைக்க திட்டமிட்டு இருந்தோம் என்றார். ஆனால் மணப்பெண் யார் என்று அவர் தெரிவிக்கவில்லை. இதனிடையே நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிகை ரியா சக்ரவர்த்தியை காதலித்து வந்ததாக கூறப்பட்டது. ஊடகங்களில் அவர்களது உறவு குறித்து அதிகாரப்பூர்வமாக பேசவில்லை என்றாலும், அவர்களது திருமணம் குறித்து வதந்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ கீழே உள்ள 24 மணி நேர தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு மையம்- 044- 2464 0050
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம்- 104- ஐ அழைக்கலாம்.