கொரோனா படுக்கைகள் தட்டுப்பாடு: நடிகர்கள், விளையாட்டு வீரர்கள்தான் காரணம்.. சொல்றது யாருனு பாருங்க!
மும்பை: நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களால் படுக்கைகள் நிரம்பி விடுவதால் மக்களுக்கு மருத்துவமனையில் படுக்கைகள் கிடைப்பதில்லை என்று மகாராஷ்டிரா அமைச்சர் அஸ்லாம் ஷாய்க் கூறியுள்ளார்.
மும்பையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடும் ஏற்பட்டதாகவும், 60-க்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.
அதிவேகத்தில் கொரோனா
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,61,736 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களில் மட்டும் மொத்தம் 80% பாதிப்புகள் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் தினமும் 50,000-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பதிவாகி வருகிறது.
படுக்கைகள் தட்டுப்பாடு
மகாராஷ்டிராவின் மும்பை, புனே, தானே, நாக்பூர் என அனைத்து நகரங்களிலும் தொற்று பாதிப்பு கடுமையாக உயர்ந்து வருகிறது. மும்பையில் மட்டும் தினமும் 10,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. மும்பையில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஏறக்குறைய அனைத்து படுக்கைகளும் நிரம்பி விட்டதால் அங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு நகரங்களிலும் இதே நிலைதான் உள்ளது.
நடிகர்கள் மீது எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
இந்த நிலையில் நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களால் படுக்கைகள் நிரம்பி விடுவதால் மக்களுக்கு மருத்துவமனையில் படுக்கைகள் கிடைப்பதில்லை என்று மகாராஷ்டிரா காங்கிரஸ் அமைச்சர் அஸ்லாம் ஷாய்க் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ' திரைப்படத் துறையைச் சேர்ந்த சில பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் லேசான அறிகுறிகளை கொண்டிருந்தாலும் அல்லது அறிகுறியற்றவர்களாக இருந்தாலும் பெரிய மருத்துவமனைகளில் படுக்கைகளை ஆக்கிரமித்து கொள்கின்றனர். இதனால் மக்களுக்கும் அல்லது கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பவர்களுக்கும் படுக்கைகள் கிடைப்பதில்லை, என்று அஸ்லாம் ஷாய்க் தெரிவித்தார்.
சச்சினை கூறினாரா?
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டென்டுல்கருக்கு கொரோன தொற்று ஏற்பட்டதால் அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு சில நாட்கள் சிகிச்சை பெற்ற அவர் பின்னர் வீட்டுக்கு திரும்பினார். இந்த நிலையில் அமைச்சர் இவ்வாறு கூறியிருக்கிறார். மும்பையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் 60-க்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.