விளம்பரத்தில் இடம்பெற்ற சர்ச்சை வாசகம்... விமர்சனத்திற்கு ஆளான ஹேமமாலினி எம்.பி.
மும்பை: நடிகையும், எம்.பி.யுமான ஹேமமாலினி மாடலாக இடம்பெற்ற விளம்பரத்தில் சர்ச்சைக்குரிய வாசகம் இடம்பெற்றிருந்தது அவரை விமர்சனத்திற்கு ஆளாக்கியுள்ளது.
பாலிவுட் நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினி ''கெண்ட் ஆர்.ஓ.'' நிறுவனத்தின் மாவு பிசையும் இயந்திரத்திற்கான விளம்பரத்தில் மாடலாக நடித்துள்ளார். அந்த விளம்பரத்தில், ''உங்கள் வீட்டு வேலைக்கார பெண்ணை மாவு பிசைய அனுமதிக்கிறீர்களா?.. அவர் கைகளில் தொற்று இருக்கக்கூடும்'' என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.
இது தீண்டாமையை முன்னிறுத்தும் வகையில் உள்ளதாகவும், பொறுப்புள்ள ஒரு எம்.பி. இது போன்ற விளம்பரத்திற்கு மாடலாக இருக்கலாமா எனவும் மகிளா காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன. வீட்டு வேலை செய்யும் பெண்களை வேதனை அடையச் செய்யும் வகையில் உள்ள இந்த விளம்பரத்திற்காக, ஹேமமாலினி எம்.பி.மன்னிப்பு கோர வேண்டும் என மகிளா காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
இதனிடையே இது தொடர்பாக ட்வீட் வெளியிட்டுள்ள ஹேமமாலினி எம்.பி., ''கெண்ட் ஆர்.ஓ.'' நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட விளம்பரத்தில் சர்ச்சைக்குரிய வாசகம் இடம்பெற்றதற்காக அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ. மகேஷ் குப்தா மன்னிப்பு கோரிய கடிதத்தை வெளியிட்டுள்ளார்.
யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விளம்பரத்தை தாங்கள் வெளியிடவில்லை என்றும், விளம்பரத்தில் இடம்பெற்ற வரிகளால் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் மகேஷ் குப்தா கூறியுள்ளார். மேலும், எதிர்காலத்தில் இது போன்ற விளம்பரங்களை வெளியிட மாட்டோம் என்றும், உரிய முறையில் கண்காணிப்போம் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
கெண்ட் ஆர்.ஓ. நிறுவனம் என்பது சர்வதேச அளவில் குடிநீர் சுத்திகரித்தல் இயந்திர தயாரிப்பில் பெயர் பெற்ற ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தின் புதிய தயாரிப்பான மாவு பிசையும் இயந்திரத்திற்காக அளிக்கப்பட்ட விளம்பரம் தான் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.