"பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து" கனத்த இதயத்துடன் வெளியேறுகிறேன்.. கங்கனா ரனாவத்
மும்பை: மும்பை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்தான். அங்கிருந்து கனத்த இதயத்துடன் வெளியேறுகிறேன் என நடிகை கங்கனா ரனாவத் வேதனையுடன் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் மும்பை போலீஸ் சரியாக செயல்படவில்லை என கங்கனா ரனாவத் விமர்சனம் செய்திருந்தார். மேலும் மகாராஷ்டிர அரசும் இந்த விவகாரத்தில் விசாரணையை முடுக்கிவிடவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அத்துமீறி கட்டியதாக மும்பையில் உள்ள கங்கனாவின் வீடு மற்றும் அலுவலகம் ஆகியவற்றின் ஒரு பகுதியை மும்பை மாநகராட்சி இடித்து தள்ளியது.
3.5 கோடி மக்களுக்கு வேலையில்லை.. மாதம் 20 லட்சம் பேர் வேலை இழக்கிறார்கள்.. இந்தியா நிலைமை இதுதான்
சிவசேனா
இதற்கு பின்புலத்தில் சிவசேனா கட்சி இருப்பதாக கங்கனா குற்றம்சாட்டினார். மேலும் மும்பைக்கு வந்தால் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறிய கங்கனா, தனக்கு பாதுகாப்பு வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தார். அதன்படி அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்
இதனிடையே மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் கங்கனா ஒப்பிட்டதால் சிவசேனா தலைவர்களின் எதிர்ப்புக்குள்ளானார். இந்த நிலையில் அவர் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் புடைச்சூழ கடந்த 9-ஆம் தேதி வந்திருந்தார்.
ஆளுநருடன் சந்திப்பு
அவர் போலீஸாரை மாபியாக்களுடன் ஒப்பிட்டும் கங்கனா கருத்து தெரிவித்திருந்தார். மகாராஷ்டிரா அரசு மீதும் முதல்வர் உத்தவ் தாக்கரே மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். நடிகை கங்கனா, மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை நேற்று திடீரென சந்தித்து புகார் அளித்தார்.
மும்பை
தற்போது கங்கனா ரனாவத் கனத்த இதயத்துடன் மும்பையிலிருந்து வெளியேறுவதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறுகையில் தொடர் தாக்குதல்கள், தனது வீடு மற்றும் அலுவலகத்தை இடிக்க நடந்த முயற்சி என மும்பையில் தங்கியிருந்த நாட்களில் தான் அச்சுறுத்தலுக்கு ஆளான விதம், தனக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களுடன் கூடிய பாதுகாப்பு ஆகியவை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் மும்பையை ஒப்பிட்டதை இரு மடங்கு உண்மையாக்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.