30 என்சிபி எம்எல்ஏக்கள் வருவாங்கன்னு எதிர்பார்த்த அஜித் பவார்.. ஒத்தை ஆளாய் தவிக்கவிட்டதால் ராஜினாமா
Recommended Video
மும்பை: என்சிபியின் 30 எம்.எல்.ஏக்கள் எப்படியும் தம்முடன் வந்துவிடுவார்கள்; பாஜக அரசுக்கு பெரும்பான்மையை உருவாக்கிவிடலாம் என தாம் போட்ட கணக்குகள் தவிடுபொடியானதால் தற்போது துணை முதல்வர் பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்திருக்கிறார் என்கின்றன மும்பை தகவல்கள்.
மகாராஷ்டிராவில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் திடீரென முதல்வராக பதவியேற்றார். என்சிபியின் அஜித் பவார் துணை முதல்வரானார். என்சிபி எம்.எல்.ஏக்கள் 54பேர் பாஜகவுக்கு ஆதரவு தருவதாக கடிதம் தரப்பட்டதால் ஆளுநர் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அத்துடன் அஜித் பவார் பதவியேற்பின் போது ராஜ்பவனில் சில என்.சி.பி.எம்.எல்.ஏக்களும் இருந்தனர். அவரைப் பொறுத்தவரையில் எப்படியும் 30 எம்.எல்.ஏக்கள் நம்முடன் வருவார்கள். ஒன்று தனிக்கட்சியாக செயல்படுவது அல்லது கூட்டமாக பாஜகவில் இணைவது என்கிற முடிவில்தான் இருந்தாராம். அதாவது கட்சித் தாவல் தடை சட்டம் பாயாமல் இருக்குமாம்.
சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்திக்கும் முதல்வர் பட்னாவிஸ்.. ராஜினாமா செய்ய திட்டமா?
10 எம்.எல்.ஏக்கள்
இதனால் என்சிபி கட்சி உடைவது என்பது உறுதியாக சொல்லப்பட்டது. என்சிபியின் தலைவரான சரத்பவாரே, 10 அல்லது 15 எம்.எல்.ஏக்கள் அஜித் பவார் பக்கம் போவார்கள். என கணக்குப் போட்டு வைத்திருந்தார்.
பல்டி அடித்த எம். எல்.ஏ.க்கள்
ஆனால் நடந்தது எல்லாமே தலைகீழாகப் போனது.. அஜித் பவாரை நம்பி டெல்லிக்குப் போன என்சிபி எம்.எல்.ஏக்கள் திடீரென மனம் மாறினர். இதனையடுத்து என்சிபி எம்.எல்.ஏக்களை டெல்லி ஹோட்டலில் இருந்து மீட்டு மும்பைக்கு அனுப்பி வைத்தது என்சிபி இளைஞர் அணி. நேரங்கள் உருண்டு போக போக அஜித் பவார் அணியில் என்சிபி எம்.எல்.ஏக்கள் யாருமே இல்லை என்கிற சூழ்நிலை உருவானது.
ஏமாற்றம் அடைந்த அஜித்பவார்
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தில் எப்படியாவது கால அவகாசம் வாங்கிவிட முடியும் என கணக்குப் போட்டது அஜித் பவார் தரப்பு. ஆனால் நேற்றே அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதால் அஜித் பவார் தரப்பு கலங்கிப் போனது.
சரத்பவாரின் மூவ்
இந்நிலையில்தான் சரத்பவார் தரப்பில் இருந்து அஜித் பவாருடன் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. எந்த சூழ்நிலையிலும் அஜித் பவாரை நம்பி போக ஒரு எம்.எல்.ஏ கூட தயாராக இல்லை என்பது வெட்ட வெளிச்சமானது.
வழியே இல்லாமல் ராஜினாமா
இதனால் வேறுவழியே இல்லாமல் தற்போது அஜித் பவார் தமது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். தம்மை நம்பி எம்.எல்.ஏக்கள் வருவார்கள் என எதிர்பார்த்த அஜித்பவார், ஒற்றை ஆளாய் தனிமையில் விடப்பட்டதுதான் இந்த முடிவை எடுத்தார் என்கின்றன மும்பை வட்டாரங்கள்.