ராகுல் காந்தி அப்படி பேசக்கூடாது.. பாஜக மாதிரியே கொந்தளிக்கும் சிவ சேனா.. சரியா போச்சு!
மும்பை: மகாத்மா காந்தி, பண்டித ஜவஹர்லால் நேரு போல, வீர் சாவர்க்கர் மதிக்கப்பட வேண்டியவர் என்று, சிவசேனா கட்சி செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
"நான் ஒன்றும் சாவர்க்கர் கிடையாது, மன்னிப்பு கேட்பதற்கு" என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று காலை தெரிவித்திருந்த நிலையில், அதற்கு பதிலடியாக சஞ்சய் ராவத் இவ்வாறு ஒரு கருத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
இந்திய நாடு பலாத்கார சம்பவங்களால் தலைகுனிவை சந்தித்து வருகிறது என்று விமர்சனம் செய்த ராகுல் காந்தி, மேக் இன் இந்தியா என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஆனால் நடப்பது ரேப் இன் இந்தியா இன்று கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.
ராகுல் காந்தி பேச்சு
அதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அந்த கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் இன்று நடைபெற்ற இந்தியாவை பாதுகாப்போம் என்ற பெயரிலான பேரணியின் போது பேசிய ராகுல் காந்தி, நான் ஒன்றும் சாவர்கர் கிடையாது மன்னிப்பு கேட்பதற்கு.. உண்மையை பேசியதற்காக மன்னிப்பு கேட்கும் பழக்கம் காங்கிரஸ்காரர்களுக்கு கிடையாது என்று தெரிவித்தார்.
சிவசேனா மறுப்பு
இந்து மகாசபா அமைப்பைச் சேர்ந்த சாவர்கர், வெள்ளையர்களிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்ததாக ஒரு தகவல் எதிர்க்கட்சியினரால் சொல்லப்பட்டு வருகிறது. இதை மனதில் வைத்துதான் ராகுல்காந்தி இவ்வாறு தெரிவித்தார். இந்த நிலையில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி அமைத்து ஆட்சி செய்துவரும், சிவசேனா, ராகுல் காந்தியின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
நாட்டுக்காக வாழ்ந்தவர்
சிவசேனா முக்கிய தலைவர் சஞ்சய் ராவத் ட்விட்டரில் இது பற்றி இன்று மாலை ட்விட்டரில், வெளியிட்டுள்ள தகவலில், வீர் சாவர்க்கர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர் கிடையாது. ஆனால் இந்த நாட்டின் பொக்கிஷம் அவர். நேரு-காந்தி போல தனது வாழ்க்கையை இந்த நாட்டுக்காக அர்ப்பணித்தவர் சாவர்க்கர். எனவே இதுபோன்ற ஒவ்வொரு பெரிய தலைவர்களையும் மதிக்க வேண்டியது அவசியம். இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
பொருந்தா கூட்டணி
இவரின் இந்த கருத்து ராகுல் காந்தியின் கருத்துக்கு நேர் எதிராக உள்ளது. சிவசேனா ஒரு தீவிர இந்துத்துவ கட்சி என்பதால் அதனுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தயக்கம் தெரிவித்து வந்தார். இருப்பினும் வேறு வழியில்லாமல் இந்த கூட்டணி அமைந்தது. இந்த நிலையில் முக்கியமான ஒரு பிரச்சினையின்போது ராகுல் காந்திக்கு எதிர் கருத்தை சிவசேனா கட்சியின் தலைவர் கூறியிருப்பது மகாராஷ்டிராவில் அமைந்திருப்பது ஒரு பொருந்தாத கூட்டணி என்பதை எடுத்துக் காட்டுவதைப் போல உள்ளது.