நல்ல வேளை எங்கள் கூட்டணியில் ஜோதிராதித்ய சிந்தியா போன்றோர் இல்லை.. சொல்வது யாருனு பாருங்க!
மும்பை: நல்ல வேளை எங்கள் கூட்டணியில் ஜோதிராதித்ய சிந்தியா போன்றவர் இல்லை என மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் சட்டசபையில் நேற்று பேசினார்.
மகாராஷ்டிரா சட்டசபையில் நேற்றைய தினம் பட்ஜெட் தொடரின் போது பாஜக முன்னாள் அமைச்சர் சுதீர் முங்கண்டிவார் சிவசேனாவை புறந்தள்ளி தவறு செய்தோம் என சட்டசபையில் கூறினார்.
இதையடுத்து பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு துணை முதல்வரும் நிதி அமைச்சருமான அஜித் பவார் பதில் அளித்தார். அப்போது அவர் பேசுகையில் தவறுகளுக்கு மன்னிப்பே கிடையாது என்றார்.
எம்எல்ஏ
இதையடுத்து அங்கு இருந்த முதல்வர் உத்தவ் தாக்கரே சிரித்தார். பின்னர் பவார் தனது பேச்சை தொடர்ந்தார். அவர் பேசும் போது ஜோதிராதித்ய சிந்தியா போன்றவர் நமது மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இல்லை. பாஜக தற்போது சட்டசபையில் இல்லாத அவர்களது எம்எல்ஏக்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது என கூறினார்.
அஜித் பவார்
அப்போது குறுக்கிட்டு பேசிய சுதீர் முங்கண்டிவார், பாஜக சிவசேனாவை புறந்தள்ளிவிட்டதாக நான் வேடிக்கையாக கூறினேன். இது அஜித்பவாருக்கு பொருந்தியதால், அவர் அதை பயன்படுத்திக் கொண்டார் என்றார். கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறு எம்எல்ஏக்களுக்கு அஜித் பவார் அறிவுறுத்தினார்.
அதிருப்தி
மேலும் எம்எல்ஏக்கள் கொரோனா பாதிப்பு தொடர்பாக எந்த நேரத்திலும் மந்த்ராலயா கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என்றார். ஜோதிராதித்ய சிந்தியா கடந்த 18 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்போது அவர் பாஜகவில் இணைந்தார். முதல்வர் பதவி, கட்சி பதவி கொடுக்கவில்லை என்ற அதிருப்தியால் அவர் இவ்வாறு செய்து விட்டார்.
ஆட்சி கவிழும்
இதனால் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் சூழல் உள்ளது. பாஜகவுக்கு சென்ற சிந்தியாவுக்கு மாநிலங்களவை எம்பி பதவி கொடுக்கப்படுகிறது. சிந்தியாவை கிண்டல் செய்யும் அஜித் பவாரும் முன்னர் இதுபோல்தான் இருந்தார். மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான ஆட்சி அமைய காங்கிரஸ், என்சிபி கட்சியின் எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட கடிதத்தை பாஜகவிடம் ஒப்படைத்துவிட்டு அதிகாலையில் விடிந்தும் விடியாமல் பாஜக தயவுடன் துணை முதல்வராக பொறுப்பேற்று கொண்டார்.
வேடிக்கை
பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்பே பாஜக அரசு கவிழ்ந்தவுடன் சிவசேனை பக்கம் சென்று அதே துணை முதல்வர் பதவியையும் பெற்றுக் கொண்டார். இவர் என்சிபி தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகன் ஆவார். தன்னிடம் நம்பி கொடுத்த எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை பாஜகவிடம் கொண்டு சேர்த்த இவர் இன்று சிந்தியாவை பற்றி பேசுவது வேடிக்கையாக இருப்பதாக கூறிவருகின்றனர்.