மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி- அத்தனை எக்ஸிட் போல் முடிவுகளும் திட்டவட்டம்!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு (எக்ஸிட் போல்) முடிவுகள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிராவின் 288 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது. பொதுவாக அமைதியாக இன்றைய வாக்குப் பதிவு நடைபெற்றது.
இன்று பதிவான வாக்குகள் வரும் 24-ந் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் வெளியாகும். ஏற்கனவே தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் பாஜக-சிவசேனா கூட்டணியே வெல்லும் என கூறப்பட்டிருந்தது.
ஹரியானாவில் விஸ்வரூபம் எடுக்கும் பாஜக.. மொத்தமாக ஒடுங்கும் காங்கிரஸ்.. டைம்ஸ் நவ் எக்சிட் போல்!
பாஜக -சிவசேனா ஆட்சி
இந்நிலையில் இந்தியா டுடே தமது எக்ஸிட் போல் முடிவுகளை அறிவித்திருக்கிறது. இதில் பாஜக- சிவசேனா கூட்டணி எளிதாக வென்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தேவையான எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 145.
பாஜக அணிக்கு அமோக இடங்கள்
இந்தியா டுடே- ஆக்ஸிஸ் எக்ஸிட் போல் முடிவுகளின் படி பாஜக-சிவசேனா கூட்டணி 166 முதல் 194 இடங்களைக் கைப்பற்றுமாம். காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 72 முதல் 90 இடங்களில் வெல்லும். இதர கட்சிகள் 22 முதல் 34 தொகுதிகளில் வெல்லும் என்கிறது இந்த எக்ஸிட் போல்.
கட்சிகளுக்கு கிடைக்கும் இடங்கள்
அதாவது பாஜக தனித்து 109 முதல் 125 தொகுதிகளிலும் சிவசேனா கட்சி 57 முதல் 70 தொகுதிகளிலும் வெல்லும். காங்கிரஸ் கட்சி 32 முதல் 40 தொகுதிகளிலும் தேசியவாத காங்கிரஸ் 40 முதல் 50 தொகுதிகளிலும் வெல்லுமாம். வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் பாஜக கூட்டணிக்கு 45%; காங்கிரஸ் கூட்டணிக்கு 35% வாக்குகள் கிடைக்கும். இதர கட்சிகளுக்கு 20% வாக்குகள் கிடைக்கும் என்கிறது இந்தியா டுடே எக்ஸிட் போல் முடிவுகள்.
அடித்து சொல்லும் டைம்ஸ் நவ்
டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் எக்ஸிட் போல் முடிவுகளும் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சியை உறுதி செய்கிறது. பாஜக-சிவசேனா கூட்டணி 230 தொகுதிகளில் வெல்லுமாம். காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு 48 தொகுதிகளும் இதர கட்சிகளுக்கு 10 தொகுதிகளும் கிடைக்க வாய்ப்பிருக்கிறதாம். அதாவது பாஜக- சிவசேனா கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்கிறது டைம்ஸ்நவ் டிவி சேனல்.
டிவி9 மராத்தி எக்ஸிட் போல்
டிவி9 மராத்தி சேனல் வெளியிட்டுள்ள எக்ஸிட் போல் முடிவுகளில் பாஜக கூட்டணிக்கு 197 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் அணிக்கு 75 தொகுதிகளும் இதர கட்சிகளுக்கு 16 இடங்களும் கிடைக்கும் என்கிறது இந்த எக்ஸிட் போல் முடிவு. இதுவும் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சியை உறுதி செய்திருக்கிறது.
பாஜகவுக்கு அமோக வெற்றி
நியூஸ் 18, IPSOS எக்ஸிட் போல் முடிவுகளும் பாஜக-சிவசேனா கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றி கூட்டணி ஆட்சியை அமைக்கும் என்கிறது. பாஜக கூட்டணிக்கு 243 தொகுதிகள் கிடைக்கும் என்கிறது இக்கருத்து கணிப்பு. காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு 41 தொகுதிகளும் இதர கட்சிகளுக்கு 4 இடங்களும்தான் கிடைக்கும் என்கிறது இந்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு.
பாஜக கூட்டணியில் சிவசேனாவுக்கு து.மு?
தற்போதைய நிலையில் தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்து கணிப்புகள் அனைத்தும் மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணிதான் வெல்லும் என்கின்றன. அப்படி பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலையில் சிவசேனாவின் இளைஞர் பிரிவு தலைவர் ஆதித்யா தாக்கரே, துணை முதல்வராக வாய்ப்பிருக்கிறது. பால்தாக்கரே குடும்பத்தில் இருந்து முதல் முறையாக தேர்தலில் சந்தித்துள்ளார் ஆதித்யா தாக்கரே என்பது குறிப்பிடத்தக்கது.