தாவூத் கூட்டாளியுடன் இணைந்து நில முறைகேடு: தேசியவாத காங். பிரபுல் படேலுக்கு அமலாக்கத்துறை சம்மன்
மும்பை: நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கூட்டாளியான இக்பால் மிர்சியுடன் இணைந்து நில முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பிரபுல் படேல் அக்டோபர் 18-ல் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த பிரபுல் படேல் பதவியில் இருந்த போது ஏர்பஸ் விமானங்கள் கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றது என குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக ஏற்கனவே சிபிஐ, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் பிரபுல் படேலிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் தாவூத் இப்ராகிம் கூட்டாளியான மிர்சியுடன் இணைந்து நில முறைகேட்டில் பிரபுல் பட்டேல் ஈடுபட்டார் என புதிய குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில்தான் வரும் 18-ந் தேதி பிரபுல் பட்டேல் மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இந்த விவகாரம் குறித்து பிரபுல் படேல் மறுப்பு தெரிவித்துள்ளார்.