அர்ணாப் கோஸ்வாமிக்கு புது சிக்கல்.. பெண் போலீஸை தாக்கியதாக மேலும் ஒரு எப்ஐஆர் பாய்ந்தது!
மும்பை: தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்ணாப் கோஸ்வாமிக்கு எதிராக மேலும் ஒரு எப்ஐஆர் பாய்ந்துள்ளது. பெண் போலீஸை தாக்கியதாக அர்ணாப் உள்ளிட்ட 3 பேருக்கு எதிராக எப்ஐஆர் போடப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டில் அலிபாக் பகுதியைச் சேர்ந்த உள்கட்ட வடிவமைப்பாளர் அன்வய் நாயக் (53 வயது) தற்கொலை செய்து கொண்டார். தனக்குத் தரவேண்டிய 5.40 கோடி ரூபாயை ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப், ஃபெரோஸ் ஷேக் மற்றும் நிதீஷ் சர்தா ஆகியோர் தராததே தற்கொலைக்கு காரணம் என அவர் எழுதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பான வழக்கில் இன்று அதிகாலை அர்ணாப் கோஸ்வாமியை மும்பை போலீசார் அவரது வீடு புகுந்த அதிரடியாக கைது செய்தனர். அவரை கைது செய்த போது போலீசார் அடித்து இழுத்துச் சென்றதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சர்கள், பாஜகவினர் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அர்ணாப் கைது.. தற்கொலை செய்து கொண்ட அன்வே நாயக்கின் குடும்பத்தினர் எழுப்பிய உருக்கமான கேள்வி
பெண் போலீஸ் மீது தாக்குதல்
இதனிடையே அலிபக் காவல்நிலைய போலீஸ் டீம் இன்று காலை மும்பையில் உள்ள அர்ணாப் இல்லத்திற்கு அவரை கைது செய்ய சென்ற போது அர்னாப் கோஸ்வாமி ஒரு பெண் போலீஸ் அதிகாரியைத் தாக்கியதாக புகார் எழுந்தது.
எப்ஐஆர் பதிவு
இதையடுத்து மும்பையின் என்.எம். ஜோஷி மார்க் காவல் நிலையத்தில் அர்ணாப் கோஸ்வாமி மற்றும் அவருடன் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக பிரிவு 353 (அரசு ஊழியரை தனது கடமையை நிறைவேற்றுவதைத் தடுக்க தாக்குதல் ), 504 (அமைதி சீர்குலைத்து வேண்டுமென்றே அவமதிப்பது) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அர்ணாப் புகார்
இதனிடையே ரிபப்ளிக் டிவி நிர்வாகம், அர்ணாப் கைது செய்யப்பட்ட விதத்திற்கு எதிராக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் முறையிட்டுள்ளது. முன்னதாக ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, தன்னை போலீசார் கைது செய்த போது அடித்து துன்புறத்தியாக காவல் துறையின் வாகனத்தில் சென்ற போது பேட்டி அளித்தார்.
மனைவியிடம் சொல்லவில்லை
இதுபற்றி அர்ணாப்பின் வழக்கறிஞர் கூறுகையில், அர்ணாப் கைது செய்யப்பட்டது அவரது மனைவிக்கு தெரிவிக்கப்படவில்லை. அவரை 2 காவல்துறை அதிகாரிகள் தாக்கினர். அவரது குடும்ப உறுப்பினர்கள் தள்ளப்பட்டனர் & வீடு 3 மணி நேரம் சுற்றி வளைக்கப்பட்டது. அவரது இடது கையில் சிராய்ப்புகள் உள்ளன. அவரது கையில் இருக்கும் காயம் பொலிஸாரால் ஏற்பட்டது" என்றார்.
ஆதாரமே இல்லாத வழக்கு
நீதிமன்றத்தால் "ஆதாரங்கள் இல்லை என்று மூடப்பட்ட மற்றும் தவறான வழக்கில்" அர்னாப் கோஸ்வாமி உடல் ரீதியாக தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார் என்று ரிபப்ளிக் தொலைக்காட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. எனினும் அர்ணாப்பால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் அன்வே நாயக்கின் மனைவி மற்றும் மகள் அக்ஷதா மற்றும் அட்னாய நாயக் ஆகியோர் அர்ணாப்பை கைது செய்த மகாராஷ்டிரா போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்கள்.