ஜியோ முக்கிய காரணம்.. திவாலானது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்!
மும்பை: கடனை திருப்பி செலுத்த முடியாததால், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் திவால் ஆகிறது.
ரிலையன்ஸ் நிறுவனம் அதன் சொத்தை விற்று அதன் மூலம் கடன்களை அடைக்க முயன்றது. ஆனால், மொத்த கடன் தீர்மான நடைமுறை எந்த முன்னேற்றத்தையும் அடையாததால் திவால் என அறிவித்துள்ளது.
முகேஷ் அம்பானியின் ஜியோ இன்ஃபோகாம் வருகைக்கு பிறகு, அவரது தம்பியான அனில் அம்பானியின், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நஷ்டம் அதிகமாகியுள்ளது.
இதையடுத்து, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம், கடன் சுமை காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பரில் தொலைத்தொடர்பு சேவையில் இருந்து முற்றிலுமாக வெளியேறியது. ரியல் எஸ்டேட் தொழிலில் கவனம் செலுத்தப்படும் என தெரிவித்தது.
2017 வரை 7 பில்லியன் டாலர் வங்கிகளிடமிருந்து கடனாக வாங்கியுள்ளது. ஆனால், கடனை அடைக்க தனது சொத்துக்களை விற்க முடியாததால் இந்த நிறுவனம் திவால் ஆனதாக அறிவித்துள்ளது.
கடந்த 12 மாதங்களில் 40 கடனாளர்களுடன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக டெலிகாம் நிறுவனம் கூறியுள்ளது.
இதனால் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தை அணுகுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்குதான் ரஃபேல் தயாரித்துக் கொடுக்கும் ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. கடனால் தத்தளிக்கும் நிறுவனத்திற்கு எதற்காக ரஃபேல் ஒப்பந்தம் தரப்பட்டது என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருந்தார் என்பது, குறிப்பிடத்தக்கது.