கருவில் 10 மாதம் சுமந்த பார்வையற்ற தாயை 20 ஆண்டாக தோளில் சுமக்கும் கைலாஷ்! உதவ முன்வந்த அனுபம் கெர்
மும்பை: பார்வையில்லாத 80 வயது தாயை தனது தோளில் சுமக்கும் நபருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் (ஸ்பான்சர்) அவர் வாழ்நாள் முழுக்க செய்ய தான் தயார் என அனுபம் கெர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை, தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்பதற்கேற்ப இன்னமும் பலர் தாய், தந்தையரை தெய்வமாக மதித்து வாழ்ந்து வருகிறார்கள்.
தங்களை சிறுவயதில் தாலாட்டி, பாலூட்டி, சீராட்டி வளர்த்த தாய், தந்தையை கடைசிவரை கண்ணுக்குள் வைத்து காப்பாற்றுவோர் இருப்பதால்தான் நாட்டில் கொஞ்சமாவது மழை பெய்கிறது.
10 மாதங்கள்
குழந்தை கருவாக இருக்கும் போது 10 மாதங்கள் வயிற்றில் சுமந்து அந்த குழந்தைக்கு 10 வயது வரை மார்பிலும் இடுப்பிலும் சுமப்பவள் தாய்!. அப்படிப்பட்ட தாயை 60 வயது முதல் தற்போது வரை தனது தோளில் சுமந்து வருகிறார் ஒரு பாசக்கார மகன். இந்த தாய் பார்வையற்றவர்.
கைலாஷ் கிரி
கைலாஷ் கிரி பிரம்மசாரி எனும் ஸ்ரவன் குமார் என்பவர்தான் தனது தாயை சுமந்து செல்கிறார். இவர் எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இடுப்பில் காவி நிற வேஷ்டியை அணிந்து கொண்டு தோளில் டோலியில் ஒரு பக்கம் தங்களது தேவையான பொருட்களையும் மறுபக்கம் தனது பார்வையற்ற தாயையும் உட்கார வைத்து வழிபாட்டு தலங்களுக்கு செல்கிறார்.
பார்வையற்ற தாய்
இவரது பார்வையற்ற தாய்க்கு இந்தியாவில் உள்ள பல்வேறு வழிபாட்டு தலங்களுக்கு சென்று தெய்வங்களை தரிசிக்க வேண்டும் என்பது ஆசை (கண்களால் பார்த்தால்தான் தரிசனமா? ஆத்மார்த்தமாக தரிசித்தலும் தரிசனமே). தனது தாயின் ஆசையை நிறைவேற்ற ஷ்ரவன் குமார் முடிவு செய்தார். இதற்காக தனது தாயை 60 வயது முதல் சுமந்து வருகிறார்.
80 வயது தாய்
தற்போது 80 வயதாகும் தாயை சுமந்து வரும் ஷ்ரவன் குமாரின் புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பாலிவுட் நடிகர் அனுபம் கெர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்த படத்தில் குறிப்பிட்டுள்ள வரிகள் மரியாதையை ஏற்படுத்துகின்றன.
உதவ முன் வந்த அனுபம் கெர்
இந்த படம் உண்மையாக இருக்க பிரார்த்தனை செய்யுங்கள். இந்த நபரை யாராவது பார்த்திருந்தாலும் யாருக்காவது தெரிந்திருந்தாலும் எனக்கு தெரியப்படுத்துங்கள். அந்த நபரின் வாழ்நாள் முழுவதும் இந்தியாவில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களையும் தனது தாயுடன் சென்று தரிசிக்க தேவையான அத்தனை உதவிகளையும் எனது anupam cares அறக்கட்டளை வழங்கி அவர்களை கவுரவப்படுத்தும் என தெரிவித்துள்ளார். தாய், தந்தைக்கு வயதாகிவிட்டாலே காப்பகங்களில் சேர்த்துவிட்டு தனது மனைவி, குழந்தைகளுடன் ஜாலியாக வாழ்க்கையை கழிக்கும் சில மகன்களுக்கு மத்தியில் இந்த கைலாஷ் என்றும் போற்றப்படுபவரே!