அதிகாலையில் அர்ணாப் கோஸ்வாமி அதிரடி கைது.. அடித்து இழுத்துச் சென்றதாக ரிபப்ளிக் டிவி புகார்!
மும்பை: ரிபப்ளிக் டிவி தலைமை எடிட்டர் அர்ணாப் கோஸ்வாமி இன்று திடீரென மும்பை போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
அர்ணாபின் வீட்டுக்கு இன்று காலை சென்ற மும்பை போலீஸ் படையினர் அவரை அங்கிருந்து கைது செய்து ராய்காட் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
தற்கொலைக்குத் தூண்டியதாக தொடரப்பட்ட ஒரு பழைய வழக்கின் கீழ் அர்ணாப் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரணை நடத்துவதற்காகவே அர்ணாபை போலீஸார் கைது செய்து கொண்டு சென்றுள்ளனராம்.
#BREAKING on #IndiaWithArnab | Republic's team enroute Raigad Police station where Arnab Goswami has been assaulted and taken by Mumbai Police; Fire in your support for #ArnabGoswami dear viewers, #LIVE here - https://t.co/jghcajZuXf pic.twitter.com/gxuhZXTHCX
— Republic (@republic) November 4, 2020
முன்னதாக பத்துக்கும் மேற்பட்ட போலீஸார் அர்ணாப் வீட்டுக்கு விரைந்தனர். அவர்களுடன் அர்ணாப் கடும் வாக்குவாதம் புரிந்துள்ளார். இதையடுத்து அவரை போலீஸார் பிடித்து இழுத்து கைது செய்து வண்டியில் ஏற்றதாக சொல்லப்படுகிறது.
போலீஸார் தன்னைத் தாக்கியதாக அர்ணாப் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் போலீஸார் இதை மறுத்துள்ளனர்.
சமீபத்தில்தான் ரிபப்ளிக் டிவி போலி டிஆர்பி விவகாரத்தில் சிக்கி பெரும் சர்ச்சையானது என்பது நினைவிருக்கலாம். இதனால் டிஆர்பி ரேட்டிங்கையே பார்க் நிறுத்தி விட்டது என்பதும் நினைவிருக்கலாம்.
ஏன் இந்த கைது?
2018ம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த இன்டீரியர் டிசைனர் அன்வாய் நாயக் மற்றும் அவரது தாயார் குமுத் நாயக் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். இவர்களைத் தற்கொலைக்குத் தூண்டியதாக அர்ணாப் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். அந்த வழக்கில்தான் தற்போது அர்ணாப் கைது செய்யப்பட்டுள்ளார்.
அலிபாக் நகரில் இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் எழுதி வைத்திருந்த தற்கொலைக் கடிதத்தில், அர்ணாப் தங்களுக்குத் தர வேண்டிய ரூ. 5.40 கோடியை தராமல் ஏமாற்றி விட்டதாகவும், அதனால் தங்களுக்கு பொருளாதார ரீதியாக பேரிழப்பு ஏற்பட்டதாகவும், அதை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வதாகவும் அன்வாய் நாயக்கும், அவரது தாயாரும் எழுதி வைத்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்து வந்த ராய்காட் போலீஸார் பின்னர் இந்த வழக்கை மூடி விட்டனர். இருப்பினும் கடந்த மார்ச் மாதம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அன்வாயின் மகள் அடன்யா நாக், மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கை நேரில் சந்தித்து இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க கோரியதன் அடிப்படையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இந்த வழக்கில்தான் தற்போது அர்ணாபை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த கைது குறித்து மும்பை இணை போலீஸ் ஆணையர் மிலிந்த் பரம்பே கூறுகையில், ராய்காட் போலீஸார்தான் இழக்கை கையாளுகின்றனர். கைது செய்ததும் அவர்கள்தான். மும்பை போலீஸார் அவர்களுக்கு உதவியாக இருந்தனர். கோஸ்வாமியை ராய்காட் அழைத்துச் சென்றுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, இந்த கைது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, கோஸ்வாமிக்கு ஆதரவாக தாங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது.