அர்னாப் கோஸ்வாமி ஜாமீன் மனு.. நிராகரித்தது மும்பை ஹைகோர்ட்.. உடல் நிலை குறித்து ஆளுநர் கவலை
மும்பை: 2018ம் ஆண்டு பதிவுசெய்யப்பட்ட தற்கொலை வழக்கில் ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் இருவரின் இடைக்கால ஜாமீன் மனுவை மும்பை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதனிடையே மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யரி, அர்னாப்பின் உடல் நிலை குறித்து, அம்மாநில உள்துறை அமைச்சரிடம் கவலை தெரிவித்துள்ளார்.
அர்னாப் கோஸ்வாமி மற்றும் நிதீஷ் சர்தா மற்றும் ஃபெரோஸ் ஷேக் ஆகியோர் தாக்கல் செய்த இடைக்கால ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ். ஷிண்டே மற்றும் எஸ் எஸ் கார்னிக் விசாரித்தது. அப்போது நீதிபதிகள், அர்னாப் உள்ளிட்டோரின் ஜாமீன் மனு குறித்து நான்கு நாட்களுக்குள் செசன்ஸ் நீதிமன்றம் முடிவு செய்யலாம் என்று கூறினர்.
மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம் அலிபாக்கை சேர்ந்தவா் கட்டிட உள்வடிவமைப்பாளர் அன்வய் நாயக்(வயது53). இவருக்கு கட்டிட உள்வடிவமைப்பு பணிகள் செய்ததற்கான நிலுவை தொகையை ரிபப்ளிக் டி.வி. ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி(47) வழங்காமல் இருந்ததாக புகார் எழுந்தது.
உள்துறை அமைச்சர் அதிரடி
இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு அலிபாக்கில் உள்ள வீட்டில் அன்வய் நாயக் தனது தாயுடன் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அர்னாப்புக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மூடப்பட்ட இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க போலீசாருக்கு மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் உத்தரவிட்டார்
அதிகாலையில் கைது
இதனைத்தொடர்ந்து கடந்த நவம்பர் 4ம் தேதி அதிகாலை அலிபாக் போலீசார் மும்பை லோயர் பரேலில் உள்ள அர்னாப் கோஸ்வாமியின் வீட்டுக்கு சென்று கட்டிட வடிவமைப்பாளர் மற்றும் அவரது தாயை தற்கொலைக்கு தூண்டியதாக, அவரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக பெரோஸ் சேக், நிதேஷ் சர்தா ஆகியோரையும் கைது செய்தனர்.
தலோஜா சிறை
இதில் 3 பேரையும் வருகிற 18-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க அலிபாக் நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்கள் 3 பேரும் கொரோனா பரிசோதனைக்கு பின்னர் அலிபாக்கில் உள்ள பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மும்பை தலோஜா சிறைக்கு அர்னாப் உள்ளிட்ட 3 பேரும் மாற்றப்பட்டனர்.இதற்கிடையே இடைக்கால ஜாமீன் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் அர்னாப் கோஸ்வாமி, கைதான மற்ற இருவரான பெரோஷ் ஷேக், நிதிஷ் ஷர்தா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
விசாரணை ஒத்திவைப்பு
இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்எஸ் ஷிண்டே, எம்எஸ் கார்னிக் அமர்வில் நவம்பர் 7ம் தேதி விசாரிக்கப்பட்டது. பின்னர் எந்த முடிவும் எடுக்காமல் வழக்கை இன்றைக்கு ஒத்தி வைத்தனர்.
நான்கு நாட்கள் அவகாசம்
இந்நிலையில் இன்று அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனுவை இன்று பிற்பகல் விசாரித்த நீதிபதிகள் எஸ்எஸ் ஷிண்டே, எம்எஸ் கார்னிக் அமர்வு ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது. அதேநேரம் அர்னாப் கோஸ்வாமி மற்றும் நிதீஷ் சர்தா மற்றும் ஃபெரோஸ் ஷேக் ஆகியோரின் ஜாமீன் மனு குறித்து நான்கு நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என்று மும்பை செசன்ஸ் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
அர்னாப் உடல் நிலை
இதனிடையே அர்னாப் கோஸ்வாமியின் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் குறித்த தனது கவலையை மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யரி தொலைபேசியில் மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கிடம் வெளிப்படுத்தினார். ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், அர்னாப் கோஸ்வாமியின் குடும்பத்தினர் அவரைப் பார்க்கவும் பேசவும் அனுமதிக்குமாறு ஆளுநர் கோசியாரி மாநில உள்துறை அமைச்சரிடம் கேட்டுக் கொண்டார். கோஸ்வாமி கைது செய்யப்பட்ட விதம் குறித்து ஆளுநர் முன்னர் தேஷ்முகிடம் தனது கவலையை தெரிவித்திருந்தார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.