டிஆர்பி முறைகேடுக்காக அர்னாப் ரூ.40 லட்சம் லஞ்சம் கொடுத்தார்.. 'பார்க்' மாஜி சிஇஓ வாக்குமூலம்
மும்பை: பிராட்காஸ்ட் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்சில் (பார்க்) இந்தியாவின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தா, மும்பை காவல்துறையிடம் தனது கைப்பட எழுதிக் கொடுத்த வாக்குமூலத்தில், ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியிடமிருந்து இரண்டு தவணைகளில் மொத்தம் ரூ .40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக தெரிவித்துள்ளார்.
டிஆர்பி மோசடி வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட துணை குற்றப்பத்திரிகையில், இந்த தகவலை, மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் 2020ம் ஆண்டு நவம்பரில் 12 பேர் மீது முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தற்போது 2வது குற்றப் பத்திரிக்கையில் தாஸ்குப்தா எழுத்துப்பூர்வ வாக்குமூலமும் இடம் பெற்றுள்ளது. ரிபப்ளிக் மீடியா நெட்வொர்க் தலைமை நிர்வாக அதிகாரி விகாஸ் காஞ்சந்தானி மீதும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒன்றாக வேலை பார்த்தவர்கள்
இரண்டாவது குற்றப்பத்திரிகையில் கூறியுள்ள தகவல்படி பார்த்தால், தாஸ்குப்தாவின் வாக்குமூலம் குற்றவியல் புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் 2020ம் ஆண்டு டிசம்பர் 27 அன்று மாலை 5.15 மணிக்கு இரண்டு சாட்சிகள் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தாஸ்குப்தாவின் வாக்குமூலம் இதுதான்: எனக்கு அர்னாப் கோஸ்வாமியை 2004 முதல் தெரியும். நாங்கள் டைம்ஸ் நவ் பத்திரிகையில் ஒன்றாக வேலை செய்தோம். நான் 2013 இல் பார்க் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக சேர்ந்தேன்.
டிஆர்பி மோசடி
அர்னாப் கோஸ்வாமி 2017 இல் ரிபப்ளிக் சேனலை தொடங்கினார். ரிபப்ளிக் தொலைக்காட்சியைத் தொடங்குவதற்கு முன்பே அவர் என்னுடன் வருங்கால திட்டங்களைப் பற்றி பேசுவார். டிஆர்பி அமைப்பு எவ்வாறு இயங்குகிறது என்பது எனக்குத் தெரியும் என்று கோஸ்வாமிக்கு நன்றாகவே தெரியும். எதிர்காலத்தில் எனக்கு உதவி செய்வேன் என்றும் வாக்குறுதி அளித்திருந்தார்.
ரிபப்ளிக் டிவிக்கு முதலிடம்
ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு நம்பர் 1 டிஆர்பி பெறச் செய்ய எனது குழுவுடன் இணைந்து பணியாற்றினேன். இது 2017 முதல் 2019 வரை தொடர்ந்தது. 2017 ஆம் ஆண்டில் அர்னாப் கோஸ்வாமி என்னை லோயர் பரேலில் உள்ள செயின்ட் ரெஜிஸ் ஹோட்டலில் தனிப்பட்ட முறையில் சந்தித்தார். அப்போது எனது குடும்பத்தினருடன் நான் பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்துக்கு இன்ப சுற்றுலா செல்ல 6000 டாலர் பணம் கொடுத்தார்.
இன்ப சுற்றுலாவுக்கு பணம்
மேலும் 2019 ஆம் ஆண்டில் அர்னாப் கோஸ்வாமி, அதே ஹோட்டலில் என்னை தனிப்பட்ட முறையில் சந்தித்தார். சுவீடன் மற்றும் டென்மார்க் குடும்ப சுற்றுலாவுக்கு 6000 டாலர்களை எனக்குக் கொடுத்தார். மேலும் 2017 ஆம் ஆண்டில், கோஸ்வாமி என்னை தனிப்பட்ட முறையில் ஐடிசி பரேல் ஹோட்டலில் சந்தித்து ரூ .20 லட்சம் ரொக்கப் பணத்தை கொடுத்தார். மேலும், 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் கோஸ்வாமி என்னை ஐடிசி ஹோட்டல் பரேலில் சந்தித்து ஒவ்வொரு முறையும் ரூ .10 லட்சம் கொடுத்தார்.
நீதிமன்றத்தில் மறுக்க திட்டம்
தாஸ்குப்தாவின் வழக்கறிஞர் அர்ஜுன் சிங் இதுபற்றி கூறுகையில், "இந்த குற்றச்சாட்டை நாங்கள் முற்றிலும் மறுக்கிறோம், ஏனெனில் அந்த வாக்குமூலம் போலீஸ் காவலில் வைத்து மிரட்டி பதிவு செய்யப்பட்டிருக்கலாம். இது நீதிமன்றத்தில் செல்லாது" என்றார்.