தலை முடியைப் பிடிச்சு... அப்படியே கொத்தா தூக்கிட்டுப் போனாங்க.. அர்ணாப் ஆதரவாளர்கள் குமுறல்!
மும்பை: அர்ணாப் கோஸ்வாமியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து அப்படியே கொத்தாக கூட்டிட்டுப் போனாங்க என்று அவரது ஆதரவாளர்கள் குமுறியுள்ளனர். ஆனால் இதுதொடர்பாக எந்த வீடியோ ஆதாரத்தையும் அவர்கள் வெளியிடவில்லை.
அர்ணாப் இன்று காலை திடீரென கைது செய்யப்பட்டார். தாய், மகனை தற்கொலைக்குத் தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அர்ணாப் கைதுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. ரிபப்ளிக் டிவியும், மக்கள் இதற்கு கொந்தளித்து கருத்து தெரிவிக்க வேண்டும், எதிர்க்க வேண்டும் என்று ஆவேசமாக அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில், அர்ணாப் கைது குறித்து பலவிதமான தகவல்களை ரிபப்ளிக் டிவியும், அவரது ஆதரவாளர்களும் வெளியிட்டபடி உள்ளனர்.
அதிகாலையில் அர்ணாப் கோஸ்வாமி அதிரடி கைது.. அடித்து இழுத்துச் சென்றதாக ரிபப்ளிக் டிவி புகார்!
நிர்பந்தப்படுத்தி கைது
வீட்டுக்குள் புகுந்து வலுக் கட்டாயமாக அர்ணாபைக் கைது செய்தனர். அவர் வர மறுத்த போது தலைமுடியைப் பிடித்து கொத்தாக இழுத்துக் கொண்டு சென்றனர். அவரை தாக்கவும் செய்தனர் சிஐடி போலீஸார் என ஒரு தரப்பு புகார் கூறியுள்ளது. ஆனால் அப்படி அவர் பலவந்தப்படுத்தப்பட்டது தொடர்பான வீடியோ ஆதாரம் எதையும் அவர்கள் வெளியிடவில்லை.
இப்படியா கைது செய்வது
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்தக் கைது நடவடிக்கையை கண்டித்துள்ளார். அவர் கூறுகையில், எனக்கு இதை நினைத்தால் அவசர கால நிலைதான் நினைவுக்கு வருகிறது. மகாராஷ்டிராவில் பத்திரிகை சுதந்திரம் தகர்க்கப்பட்டுள்ளது. ஒரு பத்திரிகையாளரை இப்படி நடத்தக் கூடாது. பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கியுள்ளது மகாராஷ்டிர அரசு என்று சாடியுள்ளார் ஜவடேகர்.
குடும்பத்தையே தாக்கினர்
இதற்கிடையே, தனது கைது குறித்து அர்ணாபே ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறுகையில், எனது மாமியாரையும், மாமனாரையும், மனைவி, மகனையும் கூட போலீஸார் தாக்கினர். என்னையும் தாக்கி கொண்டு போய் வேனில் ஏற்றினர். யாரையும் அவர்கள் விடவில்லை. அத்தனை பேரையும் தாக்கினர் என்று கோபமாக கூறினாராம் அர்ணாப்.
அப்படியெல்லாம் கிடையாது
ஆனால் மகாராஷ்டிர ஆளும் கட்சியான சிவசேனா இதை மறுத்துள்ளது. சட்டப்படிதான் அனைத்தும் நடந்துள்ளது. போலீஸார் உரிய ஆதாரம் இருந்த காரணத்தால்தான் அர்ணாப் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். யாருக்கு எதிராகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உத்தவ் தாக்கரே அரசு அமைந்த பின்னர் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதால், தவறான பார்வையுடன் இது பார்க்கப்படுகிறது என்று அக்கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
இதெல்லாம் தப்புங்க
ரிபப்ளிக் டிவி தலைமை எடிட்டர் அர்ணாப் கோஸ்வாமி கைதுக்கு இந்திய எடிட்டர்ஸ் கில்டும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கில்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த திடீர் கைது நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம். இது நிச்சயம் சரியல்ல. மகாராஷ்டிர அரசு, கோஸ்வாமி விவகாரத்தில் நியாயப்படியான நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டும். செய்திகளை கொடுக்கும் ஊடகங்கள் மீது கடுமையான நடவடிக்கையை, அதிகார துஷ்பிரயோகம் செய்வதைத் தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.