விஜய் மல்லையா விருப்பபடி ஜெயில் ரெடி.. வங்கி மோசடி வழக்கில் அடுத்த திருப்பம்!
மும்பை: வங்கி மோசடியில் சிக்கிய தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு பலத்த பாதுகாப்புடன் கூடிய சிறை தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன் நீதிமன்றத்தில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக தீர்ப்பு வரும்பட்சத்தில் அவர், இந்தியா அழைத்து வரப்படுவார். அதே நேரம், அவருக்கு பலத்த பாதுகாப்புடன் கூடிய ஜெயில் தயாராக இருப்பதாக நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதி அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்ட ஆர்தர் ரோடு ஜெயிலில் இரண்டு தளங்கள் உள்ளன. இந்த சிறையில் தான் விஜய் மல்லையாவை அடைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வங்கிகளில் ரூ.9,000 கோடி அளவிற்கு கடன் வாங்கி விட்டு, அதனை திரும்ப செலுத்தாமல் இங்கிலாந்திற்கு தொழிலதிபர் தப்பிச் சென்றார். அவரை இந்தியாவிற்கு அழைத்து வர சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. இதில், விஜய் மல்லையாவிற்கு எதிராக தீர்ப்பு அமைந்தால், அவர் கைது செய்யப்பட்டு இந்திய சிறையில் அடைக்கப்படுவார்.
முன்னதாக, லண்டன் நீதிமன்றத்தில் இந்திய சிறைகள் சுகாதாரமற்ற நிலையில், மிக மோசமாக இருப்பதாக விஜய் மல்லையா தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், கண்காணிப்பு கேமிராக்கள், மருத்துவவசதி, பலத்த பாதுகாப்புடன் ஆர்தர் சிறையை தயார் செய்துள்ளனர். இந்தியாவிலேயே அதிநவீன தொழில்நுட்பத்துடனும், பாதுகாப்புடனும் இருக்கும் ஜெயில், ஆர்தர் ரோடு ஜெயில்தான் என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.