ஆர்யன்கான் போதை வழக்கு.. லஞ்ச புகாரில் சிக்கிய அதிகாரி வான்கடே திடீர் டெல்லி பயணம்.. என்ன நடக்கிறது?
மும்பை: மும்பை சொகுசு கப்பலில் நடிகர் ஷாருக்கனின் மகன் ஆர்யன்கான் கைது செய்யப்பட்ட நிலையில் போதை பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் சமீர் வான்கடேவிற்கு எதிராக லஞ்ச புகார் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு திடீரென சமீர் வான்கடே டெல்லி வந்ததும் கேள்விகளை எழுப்பி உள்ளது.
மும்பை அருகே சொகுசு கப்பலில் போதை பொருள் பார்ட்டி நடத்தியதாக நடிகர் ஷாருக்கனின் மகன் ஆர்யன்கான் உள்ளிட்ட சிலர் அக்டோபர் 3ம் தேதி முன் கைது செய்யப்பட்டனர். போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மும்பையில் எம்ப்ரெஸ் என்ற சொகுசு கப்பலில் பார்ட்டி நடந்த போது செய்த சோதனையில் போதை பொருட்கள் சிக்கியது.
இதில் கைது செய்யப்பட்ட ஆர்யன்கான் தற்போது சிறையில் உள்ளார். இரண்டு முறை பெயிலுக்கு விண்ணப்பித்தும் இவருக்கு பெயில் கிடைக்கவில்லை. இவர் மற்றும் இவரின் நண்பர்களின் வாட்ஸ் ஆப் சாட் அடிப்படையில் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அனன்யா பாண்டே உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களுக்கு சம்மன் அனுப்பி விசாரித்து வருகிறார்கள்.
'நியாயமற்றது.. என்ன சிக்க வைக்க முயற்சி நடக்கிறது..' மும்பை ஹைகோர்டில் ஆர்யன் கான் பரபர மனு.. ஏன்
சமீர் வான்கடே
இந்த சோதனையை முன்னின்று நடத்தியவர் போதை பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் சமீர் வான்கடே. இந்த நிலையில்தான் இவருக்கு எதிராக லஞ்ச புகார் வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கிரண் கோஷாவை என்ற தனியார் துப்பறிவு அதிகாரி சாட்சியமாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த ரெய்டு நடக்கவும், ஆர்யன் கான் கைது செய்யப்படவும் கிரண் கோஷாவைதான் காரணம் என்று கூறப்படுகிறது.
லஞ்சம்
இந்த நிலையில் தற்போது கிரண் கோஷாவை தலைமறைவாகி உள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் கிரண் கோஷாவையின் பாதுகாலவர் என்று சொல்லப்படும் பிராபகர் செயில் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ஆர்யன் கானை விடுவிக்க லஞ்ச பேரம் நடந்ததாக குறிப்பிட்டு இருந்தார். அதாவது கிரண் கோஷாவை ஷாருக்கான் தரப்பிடம் 25 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும் கூறினார்.
டீலிங்
அதில் 18 கோடி ரூபாய் லஞ்சம் வரை கைக்கு வரும் என்று டீலிங் முடித்ததாகவும். அதில் 8 கோடி ரூபாயை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி வான்கடேவிற்கு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதாகவும் பிரபாகர் குறிப்பிட்டு இருந்தார். அதோடு வான்கடேவிற்கு 8 கோடி கொடுப்பது குறித்து சாம் டி சொவுசா என்பவரிடம் கிரண் கோஷாவை போனில் பேசியதாகவும். இவர்கள் ஷாருக்கானின் மேனேஜர் பூஜா டாட்லானியுடன் காரில் டீலிங் பேசியதாகவும் பிரபாகர் தனது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தலைமறைவு
அதாவது ஆர்யன் கானை விடுவிக்க சமீர் வான்கடேவிற்கு லஞ்சம் தருவது பற்றி பேரம் பேசப்பட்டுள்ளது. கிரண் கோஷாவை தற்போது தலைமறைவாக உள்ள நிலையில் போதை பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் சமீர் வான்கடே லஞ்ச ஒழிப்பு புகாரில் சிக்கி உள்ளார். இவருக்கு எதிராக போதை பொருள் தடுப்பு பிரிவு துறை ரீதியாக விசாரணை நடத்த உள்ளது. தன் மீதான புகார்களை சமீர் வான்கடே தற்போது மறுத்துள்ளார். நேற்று இரவு திடீரென டெல்லி வந்த சமீர் வான்கடே.. என் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை.
புகார்கள்
எனக்கு எதிராக பொய்யான புகார்களை அடுக்கி வருகிறார்கள். என்னுடைய தனிப்பட்ட குடும்ப விவரங்களை பொதுவில் வெளியிடுகிறார்கள். என் தாயாரின் மதம் குறித்தும் புகார் வைக்கிறார்கள். எனக்கு இதுவரை யாரும் சம்மன் அனுப்பவில்லை. நான் டெல்லி வேறு அலுவல் ரீதியான விஷயத்திற்காக வந்து இருக்கிறேன். எனக்கு எதிராக இதுவரை அலுவல் ரீதியாக சம்மன் எதுவும் அனுப்பப்படவில்லை.
குற்றச்சாட்டுகள்
என் மீதான குற்றச்சாட்டுகள் எதற்கும் ஆதாரம் கிடையாது. நான் 100 சதவிகிதம் என்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன், என்று சமீர் வான்கடே தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மும்பை போலீஸ் அதிகாரிகள் சமீர் வான்கடேவிற்கு எதிராக லஞ்ச ஒழிப்பு புகாரின் கீழ் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. ஆர்யன் கான் போதை பொருள் தடுப்பு பிரிவு வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கு தற்போது பல திருப்பங்களுடன் சென்று கொண்டு இருக்கிறது.