ஏழை எளியோருக்காக சேவை புரிவேன்... தவறை உணர்ந்து கவுன்சிலிங்கில் உருகிய ஆர்யான் கான்..!
மும்பை: போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் ஷாருகானின் மகன் ஆர்யான் கான், எதிர்காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு சேவை புரிய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இனி வரும் நாட்களில் பெயருக்கு களங்கம் ஏற்படாத வகையில் தனது செயல்பாடுகள் அமையும் என்ற உறுதியையும் அவர் அளித்துள்ளார்.
போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் ஆர்யான் கானுக்கு கவுன்சிலிங் அளித்த போது அவர் இதனைக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்யான் கான்
பாலிவுட் திரையுலகின் முன்னணி ஹீரோவான நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான், போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டு இப்போது சிறையில் இருக்கிறார். இவர் மீதான கைது நடவடிக்கையும், குற்றச்சாட்டும் நடிகர் ஷாருக்கானுக்கும் அவரது மனைவிக்கும் மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ஆர்யான் கானின் ஜாமின் மனு மீதான விசாரணை வரும் 20-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஏழை மக்களுக்கு
இந்நிலையில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் ஆர்யான் கானுக்கு அளித்த கவுன்சிலிங்கின் போது, ஏழை எளிய மக்களுக்கு சேவை புரிய விரும்புவதாகவும், தனது செயல்பாடுகள் அனைவராலும் மெச்சத்தக்க வகையில் இனி அமையும் எனவும் கூறியிருக்கிறார். மேலும், சமுதாயத்தில் பின் தங்கியுள்ள மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்வேன் என்ற உறுதியையும் ஆர்யான் கான் அளித்திருக்கிறார். எதிர்காலத்தில் எந்தவொரு சூழ்நிலையிலும் தமது பெயருக்கு களங்கம் ஏற்படாத வகையில் நடந்துகொள்வேன் எனத் தெரிவித்திருக்கிறார் ஆர்யான் கான்.

கைதி எண்
இதுவரை தவறு செய்திருந்தாலும் கூட ஆர்யான் கானிடம் இப்போது ஏற்பட்டுள்ள இந்த மாற்றமும், உறுதியும் பாராட்டத்தக்கது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ஆர்யான் கானுக்கு N956 என்ற விசாரணைக் கைதி எண் சிறை நிர்வாகத்தால் கொடுக்கப்பட்டுள்ளது. ஆர்யான் கான் மீதான கைது நடவடிக்கையில் காட்டிய வேகத்தை உ.பி.யில் விவசாயிகள் மீது கார் ஏற்றியதாக கூறப்படும் மத்திய இணை அமைச்சர் மகன் மீது ஏன் காட்டவில்லை என கடந்த சில நாட்களாக விவாதங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ஜாமினுக்கு எதிர்ப்பு
ஆர்யான் கானுக்கு ஜாமின் வழங்க போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், அவரது வழக்கறிஞர் ஆர்யானை ஜாமினில் விடுவிப்பதன் மூலம் விசாரணையில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற உறுதியை கொடுத்திருக்கிறார். ஆர்யான் கான் மீதான குற்றச்சாட்டாலும், நடவடிக்கையாலும் தந்தை என்கிற முறையில் ஷாருக்கான் தனிப்பட்ட முறையில் வருந்துவது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications