ஆடை இல்லைனாலும்.. தத்து பித்து பேச்சுக்கு பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்கணும்.. மகளிர் ஆணையம் அதிரடி
மும்பை: "பெண்கள் புடவையிலும், சல்வார் உடையிலும்.. ஏன் ஆடை ஏதும் இல்லாமல் இருந்தாலும் அவர்கள் அழகாக இருப்பார்கள்" என்று யோகா குரு பாபா ராம்தேவ் பேசியது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
மேலும், பாபா ராம்தேவ் இவ்வாறு பேசிய போது அருகிலேயே மகாராஷ்ட்ரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸின் மனைவியும் அம்ருதாவும் உடனிருந்ததும் பெரிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
பெண்களை மிக தரக்குறைவாக பேசி வரும் பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல்வேறு
தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
சர்ச்சைக்கு பெயர்போன பாபா ராம்தேவ்
ஆன்மீகம், யோகா என்று தனிப்பாதையில் பயணித்த போதிலும், அவ்வப்போது அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஏதேனும் கருத்தை கூறி சர்ச்சையை ஏற்படுத்துபவர் பாபா ராம்தேவ். பாஜகவின் தீவிர அனுதாபியாக அறியப்படும் அவர், சமீபகாலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சில மாதங்களுக்கு
முன்பு கூட ஆங்கில மருத்துவ முறையான அலோபதியை மிகவும் கீழ்த்தரமாக பாபா ராம்தேவ் பேசியது பெரும் விமர்சனத்திற்கு வித்திட்டது. இதேபோல, பாலிவுட்
நடிகைகள் குறித்தும் அவர் கருத்து தெரிவித்தது சர்ச்சையானது.
"ஆடை இல்லாவிட்டாலும்"..
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் யோகா தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாபா ராம்தேவ் யோகாவின் நன்மைகள் குறித்து பேசினார். பின்னர் வழக்கம் போல சில யோகாசனங்களையும் அவர் செய்து
காண்பித்தார். தொடர்ந்து பேசிய அவர், "பெண்கள் புடவை, சல்வார் உடையில் அழகாக இருப்பார்கள். அவ்வளவு ஏன்.. எந்த ஆடைகளையும் அணியாவிட்டாலும் கூட
பெண்கள் அழகாகதான் இருப்பார்கள்" என்று கூறினார்.
வெடித்தது சர்ச்சை
பாபா ராம்தேவின் இந்த பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது பரவி பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள்,பெண்ணுரிமை ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரும் பாபா ராம்தேவின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மேலும், பாபா ராம்தேவ் இவ்வாறு பேசும் போது மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸின் மனைவி அம்ருதாவும் மேடையில் அமர்ந்திருந்தார். இதை குறிப்பிட்டு காங்கிரஸ்,சிவசேனா (உத்தவ் அணி) உள்ளிட்ட கட்சிகள், "பாபா ராம்தேவ் பெண்களை இவ்வாறு தரக்குறைவாக பேசும் போது, அம்ருதா ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை" எனகேள்வியெழுப்பியுள்ளனர்.
மகளிர் ஆணையத் தலைவர் கண்டனம்
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசிய பாபா ராம் தேவுக்கு எனது கடும் கண்டங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பேசியதற்காக அவர் பகிரங்கமாக மன்னிப்பு
கேட்க வேண்டும்" என அவர் கூறியுள்ளார். இந்நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகனும், எம்.பி.யுமான ஸ்ரீகாந்த் ஷிண்டேவும்
கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.