நான் ஜென்டில்மேன்.. என்சிபியுடன் என்றுமே கூட்டணி கிடையாது.. அன்றே சொன்ன பால் தாக்கரே.. வீடியோ வைரல்
மும்பை: மகாராஷ்டிரத்தில் இன்னும் 6 மாதங்களில் ஆட்சி அமைப்பது குறித்து தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் சிவசேனா தீவிரமாக ஆலோசனை நடத்தி வரும் நிலையில் கடந்த 1999-ஆம் ஆண்டு என்சிபியுடன் கூட்டணி வைக்க பால் தாக்கரே மறுத்திருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரத்தில் நடந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை ஏற்படவில்லை. இதையடுத்து எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத சூழலில் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டு இன்று முதல் அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் ஆதரவு கடிதம் கொடுக்க ஆளுநரிடம் 48 மணி நேரம் அவகாசம் கேட்ட நிலையில் தற்போது 6 மாதங்கள் வழங்கப்பட்டிருப்பதாக உத்தவ் தாக்கரே கூறியிருந்தார். இதையடுத்து பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற முடிவில் உள்ள சேனா, என்சிபி- காங்கிரஸுடன் கூட்டணி வைத்து ஆட்சியில் அமர முயற்சித்து வருகிறது.
வீடியோ
சிவசேனா ஒரு நாள் நிச்சயம் ஆட்சியை பிடிக்கும் என தந்தை பால் தாக்கரேவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்ற உத்தவ் தாக்கரே முயற்சித்து வரும்நிலையில் பால் தாக்கரே கடந்த 1999-ஆம் ஆண்டு பேசிய வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
அயோக்கியர்களின் விளையாட்டு
1999-ஆம் ஆண்டு பால்தாக்கரே ஒரு பேட்டியில் கூட்டணி குறித்து கூறியிருந்தார். என்சிபியுடன் கூட்டணிக்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பால் தாக்கரே கூறுகையில், அரசியலில் வாய்ப்பா எதற்கு? அயோக்கியர்களின் விளையாட்டு இது.
யாராக இருந்தாலும் சரி
ஒருவர் ஜென்டில்மேனாக இருக்க வேண்டுமா இல்லை அயோக்கியனாக இருக்க வேண்டுமா என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். யாராவது அயோக்கியனாக முயற்சித்தால் என்ன செய்வது? அயோக்கியர்களுடன் நான் எந்த காலத்திலும் கூட்டணி வைக்கமாட்டேன். அது யாராக இருந்தாலும் சரி.
வீடியோ வைரல்
அடல் பிகாரி வாஜ்பாயின் ஆட்சியை கவிழ்க்க காரணமாக இருந்தவருடன் நாம் எப்படி கைகுலுக்க முடியும். நான் அதை செய்யமாட்டேன் என்று பால் தாக்கரே கூறியிருந்தார். தந்தைக்கு கொடுத்த சத்தியத்தை காக்க துடிக்கும் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே தற்போது அவரது தந்தையின் பேச்சை மீறி என்சிபியுடன் கூட்டணி பேச்சு நடத்தி வருவதாக குறிப்பிட்ட இந்த வீடியோ வைரலாகி வருகிறது.