கொரோனா வைரஸ்...நீட்சியாக முக பக்கவாதம்...எப்படி அறிவது...மும்பையில் தாக்கம்!!
மும்பை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் சிலருக்கு தற்காலிக முக பக்கவாதம் ஏற்படலாம் என்று அதற்கு மருத்துவம் அளித்து வரும் மும்பை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் குறிப்பாக மும்பையில் கொரோனா வைரஸ் நோயில் இருந்து மீண்டவர்களில் சிலருக்கு இந்த பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. இது பெல் பக்கவாதம் என்றும் அழைக்கப்படுகிறது.
மும்பையில் முலுண்ட் பகுதியில் இருக்கும் போர்டிஸ் மருத்துவமனை நரம்பியல் மருத்துவர் ராஜேஷ் பென்னி கூறுகையில், ''பெல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, எதிர்பார்க்காத அளவிற்கு நோயாளிகள் வருகின்றனர். இது ஏப்ரல் ஜூலை மாதங்களில் அதிகரித்துள்ளது. மும்பையில் தற்போது இந்த முக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால், கொரோனா தொற்று அதிகரித்து வரும் பகுதிகளில் இதன் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது'' என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மட்டுமில்லை, சீனா போன்ற நாடுகளிலும் பெல் வகை பக்கவாதம் காணப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த வகை பக்கவாதம் அந்த நாட்டு மக்களையும் பாதித்து இருந்ததாக நரம்பியல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சீன நரம்பியல் மருத்துவர்கள் இந்த வகை பக்கவாதத்தை முதலில் பதிவு செய்து இருந்ததாக மருத்துவ இதழியல்கள் குறிப்பிடுகின்றன.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது இதுபோன்ற குறைபாடுகள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். முகத்தின் ஒரு பக்கத்தில் இதன் பாதிப்பு ஏற்படும்போது, உடன் காய்ச்சல், இருமல், மூச்சு திணறல் இருக்கும்போது மருத்துவர்களிடம் செல்கின்றனர். அப்போது சிடி ஸ்கேன் செய்யப்பட்டு அவர்களுக்கு வந்திருப்பது கொரோனாவின் பாதிப்பு என்று கண்டறிகின்றனர்.
இதுகுறித்து மூத்த மருத்துவர் ஒருவர் கூறுகையில், ''கொரோனா அறிகுறிகளுடன், நரம்பியல் பிரச்சனைகளுடன் ஒருவர் வந்தால், உடனே நாங்கள் மருந்து எழுதிக் கொடுப்பதில்லை. பரிசோதனைக்கு எழுதிக் கொடுத்து, என்ன பாதிப்பு என்று அறிந்த பின்னர்தான் மருந்து வழங்குவோம்'' என்கிறார்.
இந்த பக்கவாதம் இருக்கும் பலருக்கும் லேசான கொரோனா அறிகுறிகள்தான் இருந்துள்ளது. பெரும்பாலனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபடவில்லை. இந்த பக்கவாதம் பிரச்னையை வைரஸ் பாதிப்பு என்றே எடுத்துக் கொண்டு, அதற்கு ஸ்டீராய்டு மருந்து அளிக்கின்றனர்.
10ஆம் வகுப்பு வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. ஆகஸ்ட் 10ல் வெளியாகும்.. தமிழக அரசு அறிவிப்பு
இந்த பக்கவாதம் இருப்பவர்களுக்கு கண்ணில் இருக்கும் விழிகள் நகரும். ஆனால், கண் இமை அசைவில்லாமல் இருக்கும். பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் கன்னம் மற்றும் தாடையும் அசைவின்றி இருக்கும்.
பெல் பக்கவாதம் என்றால் என்ன?
- முகத்தின் ஒரு பக்கம் ஏற்படும், அந்தப் பகுதியை வலுவிழக்கச் செய்யும்.
- இந்த பக்கவாதம் ஏற்படும்போது முகத்தின் அசைவுகள் பாதிக்கப்படும். அந்தப் பகுதியில் இருக்கும் நரம்பு பாதிக்கப்படுவதால் இந்த சிக்கல் ஏற்படுகிறது.
- கண்ணீர் சுரப்பிகள், உமிழ்நீர் சுரப்பிகள், காதின் மத்தியப் பகுதி, நாக்கு ஆகியவையும் பாதிக்கப்படும்
- முழுவதும் குணமாக ஆறு மாதங்கள் தேவைப்படும்
- உடனடியாக சோர்வு ஏற்படும். வாய் மற்றும் கண்களில் தளர்வு ஏற்படும்
- முகத்தில் வலி ஏற்படும், சுவை குறையும். பெரிய சத்தம் ஏற்பட்டால் அதை கேட்க முடியாத சூழல் ஏற்படும்.
- மன அழுத்தம், தூக்கம் பற்றாமை ஆகியவற்றில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தி குறையலாம். இதற்கு முக்கிய மருத்துவமே ஸ்டெராய்ட்ஸ் மற்றும் வைரஸுக்கு எதிரான மருந்துகள்தான்.