உலகின் மிகப்பெரிய பணக்காரர்.. பிரிட்டன்காரர்.. டிஎன்ஏ சோதனை செய்து பார்த்தால் பூர்வீகம் தமிழகமாம்!
மும்பை: உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரும் 'விர்ஜின்' குழுமத் தலைவருமான ரிச்சர்ட் பிரான்சன், தனது மூதாதையர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற சுவாரசிய தகவலை வெளியிட்டுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்காக தனது டிஎன்ஏ பரிசோதனை செய்து பார்க்கப்பட்ட போது, இந்த உண்மை தனக்கு தெரிய வந்ததாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
1793 ஆம் ஆண்டு முதல், நான்கு தலைமுறைகளாக எங்கள் மூதாதையர்கள் தமிழகத்தின் கடலூர் பகுதியில் வசித்து உள்ளார்கள். தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணைத்தான் எனது மூதாதையர் திருமணம் செய்துள்ளார். எனவே, ஒவ்வொரு முறை, நான் இந்தியர்களை சந்திக்கும் போதெல்லாம், இவர்கள் எனது உறவினர்களாக இருக்கக்கூடும் என்று பெருமிதம் கொண்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விர்ஜின் குழுமம்
பிரிட்டனை சேர்ந்த, 69 வயதாகும் ரிச்சர்ட் பிரான்சன், புகழ்பெற்ற விர்ஜின் என்ற தொழில் குழுமத்தின் தலைவராகும். ஏர்லைன்ஸ், டெலிகாம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 400க்கும் மேற்பட்ட நிறுவனங்களை இவர் நடத்தி வருகிறார்.
முதலீடு
மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றுள்ள உத்தவ் தாக்கரேவை சந்தித்து, ஹைப்பர் லூப் தொழில்முதலீடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக அவர் மும்பை வருகை தந்துள்ளார். அப்போதுதான் இந்த சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
தமிழக பாரம்பரியம்
தமிழகத்தின் பூர்வீகம் என்பது மிகவும் பழமையானது. காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த போதிதர்மர் மற்றும் சீனா நாட்டுக்கு இடையேயான உறவு அனைவரும் அறிந்ததே. போதிதர்மரை புத்தமதத்தின் குருக்களில் ஒருவராக சீனர்கள் கருதுகிறார்கள்.
மூத்த குடி
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி, என்ற புகழ்பெற்ற தமிழ் மரபு, பல்வேறு நாடுகளிலும் பரந்து விரிந்து கிளைகளை பரப்பி உள்ளது என்பது இதுபோன்ற டிஎன்ஏ டெஸ்ட்களின் மூலமும் அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.