மும்பை பிரியாணி கிங்...ஜாஃபர் பாய்...கொரோனாவைத் தொடர்ந்து மாரடைப்பில் உயிரிழப்பு!!
மும்பை: கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக மொகாலாய பிரியாணியை மனத்துடன், சுவையுடன் தயாரித்து வழங்கி வந்த மும்பை பிரியாணி கிங் என்று அழைக்கப்பட்டு வந்த 83 வயது ஜாஃபர்பாய் மன்சூரி கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பில் உயிரிழந்தார்.
கொரோனா தொற்று காரணமாக மும்பையில் இருக்கும் பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்த ஜாஃபர் மன்சூரி சிகிச்சை பலனின்றி மாரடைப்பில் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார். கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு நான்கு மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர். இவரது உடல் மரைன் லைனில் இருக்கும் பாதா கப்ரஸ்தானில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் இருக்கும் கிராண்ட் ரோட்டில் இருந்து டோங்கிரி, மொஹம்மது அலி ரோட்டில் இருந்து மகிம் மற்றும் ஜோஹேஸ்வரி என்று இவரது டெல்லி தர்பார் விரிந்து பரந்துள்ளது. முதன் முதலில் 1973ஆம் ஆண்டில் மும்பையில் இருக்கும் கிராண்ட் சாலையில் டெல்லி தர்பார் ஓட்டலை துவக்கினார். சிக்கன், மட்டன் பிரியாணிக்கு இவரது தர்பார் மிகவும் பிரபலமானது.
ஒர்லியில் இருக்கும் ஐந்து நட்சத்திர ஓட்டலில் ஒருமுறை ஜாஃபர் உணவு திருவிழா நடத்தி இருந்தபோது, நாற்பது வகையான பிரியாணிகளை தயாரித்து இருந்தார் என்று இந்த விழாவில் பங்கேற்று இருந்த உருது எடிட்டர் சர்ஃபிரஸ் அர்சோ நினைவு கூறுகிறார்.
மொகலாயர்கள் தயாரிக்கும் பிரியாணியில் எந்தளவிற்கு மசாலாவை சேர்க்க வேண்டும் என்பதை சரியாக உணர்ந்து வைத்து இருந்தவர் ஜாஃபர். இதுதான் இவரது பிரியாணியின் ரகசியமாகவும் அமைந்து இருந்தது. கொலபாவில் இருந்த டெல்லி தர்பாரை தனது சகோதரருக்கு விட்டுக் கொடுத்து கிரான்ட் ரோட்டில் ஒரு கிளையை துவக்கினார். பின்னர் இது 'ஜாபர் பாய் டெல்லி தர்பார்' என்று அழைக்கப்பட்டது.
இவருடன் இவரது மகன்களும் இணைந்து அரபு நாடுகளிலும், ஐக்கிய அரபு அமீரகத்திலும் ஜாபர் பாய் டெல்லி தர்பார் திறந்துள்ளனர்.