மகாராஷ்டிரத்தை ஆள போவது யார்?.. ஆளுநரை தனித்தனியே சந்தித்த பாஜக, சிவசேனா
Recommended Video
மும்பை: மகாராஷ்டிரத்தை ஆட்சி செய்யப் போவது யார் என விவகாரத்தில் இழுபறி நீடித்து வருவதால் ஆளுநரை பாஜகவும் சிவசேனாவும் தனித்தனியே சந்தித்து பேசின.
மகாராஷ்டிரத்துக்கும் ஹரியானாவுக்கும் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் ஹரியாணாவில் பாஜக ஆட்சி அமைத்தது. மகாராஷ்டிரத்தில் பாஜகவும் சிவசேனாவும் முறையே 105 இடங்களும் 56 இடங்களும் வெற்றி பெற்றுள்ளன.
மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 145 இடங்களை பெற்றால் மட்டுமே ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைக்க முடியும். ஆனால் மகாராஷ்டிரத்திலோ எந்த கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள சிவசேனா முயல்கிறது.
முதல்வர் பதவியில் இரு கட்சிகளும் தலா இரண்டரை ஆண்டுகள் இருக்க வேண்டும் என கடந்த சனிக்கிழமை நடந்த சிவசேனா எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் பாஜகவோ முதல்வர் பதவியை தர மறுக்கிறது. இந்த நிலையில் இரு கட்சிகளும் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர்.
அதன்படி சிவசேனாவின் திவாகர் ரோட்டே ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை காலை 10.30 மணிக்கு சந்தித்தார். முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் காலை 11 மணிக்கு ஆளுநரை சந்தித்து பேசினார். பெரும்பான்மை இல்லாததால் பாஜகவுக்கு ஆட்சி அமைக்க உரிமை அளிக்கக் கூடாது என ஆளுநரை சிவசேனா வலியுறுத்தவே இந்த சந்திப்பு என கூறப்படுகிறது.
அது போல் 105 இடங்களை பெற்றுள்ளதால் தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கோருவதற்காக ஆளுநரை பாஜக சந்திக்கிறது என்றும் கூறப்படுகிறது. ஆனால் இரு கட்சிகளும் தாங்கள் மரியாதை நிமித்தமாகவும் தீபாவளி வாழ்த்துகளை கூறிக் கொள்ளவும் ஆளுநரை சந்தித்ததாக கூறியுள்ளன.