புது ட்விஸ்ட்.. மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க போவது பாஜகதான்.. சொல்கிறார் பாட்டில்
மும்பை: மகாராஷ்டிராவில், சிவசேனாவுடன் இணைந்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு அமைக்க உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், புது திருப்பம் ஏற்பட்டுள்ளது.
288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபையில், தேர்தலில், 105 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவானது. சிவசேனா 56 இடங்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
என்.சி.பி.க்கு 54 இடங்களும், காங்கிரசுக்கு 44 இடங்களும் கிடைத்தன. மாநிலத்தில் அரசாங்கத்தை அமைக்க, எந்தவொரு கட்சியும் அல்லது கூட்டணிக்கும் குறைந்தது 145 எம்.எல்.ஏ.க்கள் தேவைப்படுகிறது.
அங்கு எந்த கட்சியும் ஆட்சியமைக்க முன்வராததால், அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே ஒருவழியாக நாளை ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க அனுமதி கேட்க உள்ளது சிவசேனா. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவையும் அக்கட்சி பெற்றுள்ளது.
இந்த நிலையில், மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், இன்று அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு, , சுயேச்சைகளின் ஆதரவுடன் 119 எம்.எல்.ஏக்கள், ஆதரவு உள்ளது. அரசு அமைப்பதற்கான நம்பிக்கை பாஜகவுக்கு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மகாராஷ்டிராவின் அடுத்த அரசு சிவசேனா தலைமையில் அமையும். காங்கிரஸ் மற்றும் என்.சி.பி உடன் இணைந்து பொதுவான குறைந்தபட்ச செயல் திட்டம் (C.M.P) உருவாக்கப்படும் என்று சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவுத் தெரிவித்தார்.