மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜக மறுப்பு.. ஆளுநரின் அடுத்த முடிவு என்ன? இருப்பது 3 ஆப்ஷன்கள்
மும்பை: மகாராஷ்டிராவின் சட்டசபை பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், ஆளுநர் அழைப்புவிடுத்தும் கூட, ஆட்சியமைக்க பாஜக முன்வரவில்லை.
இப்போது, ஆளுநரிடம், மொத்தம் 3 வாய்ப்புகள் எஞ்சியுள்ளன என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள் அக்டோபர் 24ஆம் தேதி வெளியாகின. 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட சபையில் குறைந்தபட்சம் 145 எம்எல்ஏக்களையாவது பெற்றுள்ள கட்சியால்தான் ஆட்சி அமைக்க முடியும்.
பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் வெற்றி பெற்றன.
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியாது- ஆளுநரிடம் தெரிவித்தது பாஜக
பிடிவாதம்
இதுவரை கூட்டணி கட்சிகளான, பாஜக மற்றும் சிவ சேனா ஆகிய இரு கட்சிகளும் தங்கள் பிடிவாதத்தில் இருந்து இறங்கிவரவில்லை. ஆட்சியில், சரி பாதி பங்கு வேண்டும் என்ற சிவசேனாவின் கோரிக்கையை பாஜக ஏற்கவில்லை. மற்றொரு பக்கம், தேசியவாத காங்கிரஸ் கட்சியும், சிவசேனா கட்சியுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டது.
ஆளுநர் என்ன செயவார்
நேற்று முன்தினம் நள்ளிரவுடன், மகாராஷ்டிர மாநில சட்டசபையின் பதவிக்காலம் நிறைவடைந்தது. இந்த நிலையில், பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் நேற்று அழைப்புவிடுத்தார். ஆனால், ஆட்சியமைக்க வாய்ப்பில்லை என பாஜக இன்று மாலை திடீரென அறிவித்துவிட்டது. இப்போது ஆளுநர் கையில் எஞ்சிய வாய்ப்புகள் இவைதான்.
சிவசேனா
அதில் ஒரு வாய்ப்பு, அடுத்ததாக யார் அதிக தொகுதிகளை வென்ற கட்சியோ அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்கலாம். அதாவது சிவசேனாவை ஆளுநர் அழைக்க முடியும். சிவசேனா, தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைக்க முடிந்தால் ஆட்சியமைக்க பலம் கிடைக்கும். ஆனால் தேசியவாத காங்கிரஸ் அதற்கு தயாராக இல்லை.
சட்டசபையிலேயே தேர்வு
மற்றொரு வாய்ப்பையும் ஆளுநரால் வழங்க முடியும். அது என்னவென்றால், சட்டசபையை கூட்டி அங்கேயே யார் முதல்வர் என்பதை தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என்று ஆளுநரால் உத்தரவிட முடியும். அவ்வாறு சட்டசபையிலேயே ஒருவரை முதல்வராக பெரும்பான்மை எம்எல்ஏக்கள் தேர்தெடுத்துவிட்டால் பெரும்பான்மையை மறுபடியும் நிரூபிக்க தேவை இருக்காது. தலை எண்ணிக்கையோ அல்லது வாக்குபதிவு பெட்டியை வைத்து ஓட்டு சீட்டு முறையிலோ, இதுபோல முதல்வரை தேர்ந்தெடுக்க முடியும். உத்தரபிரதேசத்தில் கல்யாண்சிங் இப்படித்தான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998-ஆம் ஆண்டில் இந்த நிகழ்வு உத்தரபிரதேச சட்டசபையில் நடைபெற்றது.
குடியரசு தலைவர் ஆட்சி
மற்றொரு வாய்ப்பு என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம்தான். அதாவது எந்த கட்சியும் ஆட்சியமைக்க வரவில்லை என்பதால், குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்வதாக ஆளுநர் தெரிவிக்க முடியும். இவ்வாறு தெரிவித்தால் குடியரசு தலைவர் ஆட்சி காலம் முடிவடைந்ததும், மீண்டும் புதிதாக சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதனிடையே, காங்கிரஸ் கட்சி தங்களை ஆட்சியமைக்க அழைப்புவிடுக்க வேண்டும் என கோரியுள்ளது.