பாஜகவின் அடுத்த டார்கெட் மகாராஷ்டிரா? அச்சத்தில் சிவசேனா கூட்டணி
மும்பை: கர்நாடக இடைத்தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி பெற்றுள்ள மிகப்பெரிய வெற்றியின் காரணமாக, அதே பார்முலாவை மகாராஷ்டிராவிலும் அக்கட்சி கையில் எடுக்கக் கூடும் என்ற அச்சம் அங்குள்ள ஆளும், சிவசேனா கூட்டணி அரசுக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகாவிலும், இப்போது மகாராஷ்டிராவில் எப்படி தேர்தலுக்குப் பிறகு ஒரு கூட்டணி அமைந்ததோ, அது போலத்தான் காங்கிரசும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும், தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தன.
அங்கும், பாஜகவுக்கு கையில் கிடைத்த வாய்ப்பு இந்த கூட்டணியால் கடைசி நேரத்தில் நழுவி போனது. மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை போலத்தான் எடியூரப்பாவும் 2018ல் ராஜினாமா செய்தார்.
சந்தேகங்களுக்கு பதில் தந்தால்தான் ராஜ்யசபாவில் குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவு: உத்தவ் தாக்கரே
கர்நாடகா
பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றை கோஷத்தால் உருவானது காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கூட்டணி ஆட்சி. ஆனால் இந்த பொருந்தாத கூட்டணி ஓராண்டு மட்டுமே நிலைத்தது. இரு கட்சிகளையும் சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். சபாநாயகர் அவர்களை தகுதி நீக்கம் செய்தார். நடப்பு சட்டசபை பதவி காலத்தின்போது, தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று உத்தரவிட்டார்.
12 தொகுதிகளில் வெற்றி
சபாநாயகர் உத்தரவுக்கு எதிராக தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தை நாடினர். தகுதி நீக்கம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறிய போதிலும் கூட, இடைத்தேர்தல்களில் அவர்கள் போட்டியிடலாம் என்றும் அறிவித்தது. இதையடுத்து 15 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்கள் நடைபெற்றன. கட்சி தாவிகளால்தான், இந்த இடைத்தேர்தல் கட்டாயமாக மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் தீவிர விமர்சனங்களை முன்வைத்தன. ஆனால் இந்த பிரச்சாரம் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்து போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளனர். வெறும் மூன்று தொகுதிகளில்தான் தோற்றது பாஜக. 12 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று கர்நாடகாவில் அறுதிப் பெரும்பான்மை பலத்தைப் பெற்று விட்டது.
கட்சி தாவ உற்சாகம்
இப்போது இதே பார்முலாவை மகாராஷ்டிராவில் பாஜக செயல்படுத்த வாய்ப்புள்ளது என்ற அச்சம் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கூட்டணி ஆட்சிக்கு ஏற்பட்டுள்ளது. பாஜகவை நம்பி, சொந்த கட்சியை விட்டு சென்றாலும், மீண்டும் இடைத்தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதை கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி விட்டதால், கட்சித் தாவ விரும்புவோர் மகிழ்ச்சி மன நிலைதான் இருக்கிறார்கள். அச்சம் கிடையாது.
மக்கள் ஆதரவு
தகுதி நீக்கம் செல்லும் என்றாலும், மீண்டும் இடைத் தேர்தலில் போட்டியிடலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், கட்சி தாவி மீண்டும் இடைத் தேர்தலில் போட்டியிடலாம், மக்களும் நமக்குத்தான் ஆதரவு அளிப்பார்கள் என்ற மன நிலைக்கு வந்துள்ளனர். ஏனெனில் இந்த தீர்ப்பு தான் இனி வரும் காலங்களிலும் மேற்கோளிடப்பட்டு, வாதிடப்படும் என்பதால் அவர்களுக்கு இது வசதியாகி உள்ளது. எனவே எப்போது வேண்டுமானாலும் மகாராஷ்டிரா ஆளும் கட்சியினர் மீது ஆபரேஷன் செயல்படுத்தப்படும் என்ற அச்சம், சிவசேனா கூட்டணியில் நிலவுகிறது.