வயிற்றில் நெருப்பை கட்டியுள்ள தாக்கரே அண்ட் கோ.. அஜித்பவார்- பாஜக எம்பி சந்திப்பின் பின்னணி என்ன?
Recommended Video
மும்பை: மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்று இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவுள்ள நிலையில் அஜித் பவாரை பாஜக எம்பி சந்தித்துள்ளதாக பரபரப்பு எழுந்துள்ளது.
மகாராஷ்டிரா அரசியலில் கடந்த மாதம் 24-ஆம் தேதி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி கடந்த சில நாட்களுக்கு முன் வரை யாரும் ஆட்சி அமைக்காத சூழல் நிலவியது. ஏனெனில் ஒருவருக்கும் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க முடியவில்லை.
இந்த நிலையில் சிவசேனா- காங்கிரஸ்- என்சிபி ஆகிய கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க இருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அஜித் பவாரின் ஆதரவுடன் பாஜகவின் தேவேந்திர பட்னவீஸ் அவசர அவசரமாக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
உச்சநீதிமன்றம்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தை நாடியது. இதில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் பாஜகவுக்கு உத்தரவிட்டது. இதனிடையே துணை முதல்வராக பதவியேற்ற அஜித் பவார் அப்பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து நிலைமை உணர்ந்து பட்னவீஸும் ராஜினாமா செய்ததால் பாஜக அரசு கவிழ்ந்தது.
உத்தவ் தாக்கரே
இதையடுத்து அஜித் பவார் மீண்டும் என்சிபிக்கே திரும்பினார். பின்னர் நேற்று முன் தினம் மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அவர் இன்றைய தினம் உத்தவ் தாக்கரே நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்.
சந்திப்பால் பரபரப்பு
இந்த நிலையில் நாந்தெத் பகுதியின் பாஜக எம்பி பிரதாப் ராவ் கோவிந்தராவ் சிக்காலிகர் அஜித் பவாரை இன்று சந்தித்து பேசினார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் நிலையில் இந்த சந்திப்பால் பரபரப்பு எழுந்துள்ளது.
கூட்டணி
இதுகுறித்து அஜித் பவார் செய்தியாளர்களிடம் கூறுகையில் பாஜக எம்பி என்னை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். நாங்கள் வெவ்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் எங்களுக்குள் நல்லுறவு நீடித்து வருகிறது. இந்த சந்திப்பின் போது நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து பேசவில்லை. சஞ்சய் ராவத் கூறியது போல் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும் என்றார்.
பரபரப்பு
மகாராஷ்டிரா அரசியலில் இன்று உத்தவ் தாக்கரே நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறும் வரை கூட்டணி கட்சியினர் வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு உள்ளதாகவே கூறப்படுகிறது. எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம் என்பதால் மகாராஷ்டிரா அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.