மகாராஷ்டிரம்: நாங்கதான் அதிக இடங்களில் ஜெயிச்சிருக்கோம்.. முதல்வர் பதவி எங்களுக்கே.. பாஜக உறுதி
மும்பை: மகாராஷ்டிரத்தில் நாங்கள்தான் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். எனவே முதல்வர் பதவி எங்களுக்குத்தான் என பாஜக உறுதிப்பட தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு பாஜகவுடன் மாநில கட்சியான சிவசேனா கூட்டணி வைத்தது. இதில் பாஜக 122 இடங்களிலும் சிவசேனா 63 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி 42 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 42 இடங்களிலும் வெற்றி பெற்றது.
இதையடுத்து மகாராஷ்டிரத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தது. எனினும் கடந்த 5 ஆண்டுகளில் பாஜகவும் சிவசேனையும் எலியும் பூனையுமாகவே இருந்தன. ஆயினும் நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டசபை தேர்தலிலும் இரு கட்சிகளும் கூட்டணி வைத்தன.
நெகிழ வைத்த மணப்பாறை எம்எல்ஏ.. கிட்னி ஆபரேஷன் செய்த நிலையிலும் சுஜித் கிராமத்தில் முகாம்!
17 இடங்கள் போச்சு
இந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 288 சட்டசபை தொகுதிகளில் பாஜக 105 இடங்களிலும் சிவசேனை 56 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்த இரு தேர்தல்களிலும் பாஜக கடந்த முறையை காட்டிலும் 17 இடங்களை கோட்டை விட்டுள்ளது.
சிவசேனா டிமாண்ட்
தேர்தல் முடிவுகள் வந்து இரு தினங்களுக்கு பிறகு பாஜகவின் கழுத்தை அறுக்கும் செயலில் சிவசேனா ஈடுபட்டுள்ளது. ஆட்சி அமைப்பது குறித்து சிவசேனை கட்சி எம்எல்ஏக்களும் உத்தவ் தாக்கரேவும் நேற்று முன் தினம் ஆலோசனை நடத்தினர். அதில் முதல்வர் பதவியை சரி சமமாக பங்கிட்டு கொள்வது என முடிவு செய்யப்பட்டது. அதாவது மொத்தம் 5 ஆண்டுகளில் இரண்டரை ஆண்டுகள் பாஜகவும் மீதமுள்ள இரண்டரை ஆண்டுகளில் சிவசேனாவும் ஆட்சி செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
பட்னவீஸ்
இது குறித்து அமித்ஷாவோ அல்லது பட்னவீஸோ தங்களுக்கு எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்க வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத பாஜக தலைவர் கூறுகையில் 1995-ஆம் ஆண்டு பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. அப்போது சிவசேனா 73 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் பாஜகவோ 65 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் முதல்வர் பதவி சிவசேனாவுக்கும் துணை முதல்வர் பதவி பாஜகவுக்கும் வழங்கப்பட்டது.
56 இடங்கள்
அதை போல் இந்த முறை 105 இடங்களில் வெற்றி பெற்றுள்ள பாஜக முதல்வர் பதவியையும் 56 இடங்களில் வெற்றி பெற்றுள்ள சிவசேனாவுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என பழைய சம்பவத்தை மேற்கோள்காட்டினார். எனவே சிவசேனாவுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படலாம் என தெரிகிறது. ஆனால் சிவசேனாவோ முதல்வர் பதவியிலேயே குறியாக உள்ளது.
உத்தவ் தாக்கரே
இதுகுறித்து சிவசேனாவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறுகையில் முக்கிய இலாகாக்களை பாஜகவிடம் இருந்து கேட்டு பெறுவதற்காகவே முதல்வர் பதவியை கோரி வருகிறோம். ஆரம்பத்தில் முதல்வர் பதவியை சிவசேனா கேட்டது உண்மைதான். ஆனால் அப்பதவியை உத்தவ் தாக்கரே ஏற்றுக் கொண்டால் மட்டுமே என்ற நிலை இருந்தது.
முக்கிய இலாகா
தற்போது உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ஏற்க மறுத்துவிட்டார். அவரது மகன் ஆதித்ய தாக்கரேவை முதல்வராக்க கட்சியினர் விரும்புகின்றனர். ஆனால் அவரோ நிர்வாகத்தில் முன் அனுபவம் இல்லாதவர். கட்சியிலும் எந்த பதவியையும் வகிக்காதவர். எனவே எங்கள் இலக்கு முக்கிய இலாகாக்களே என கூறியுள்ளார்.