மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி அமைத்து போட்டி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதாவும், சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிப்பு வெளியிட்டன. பாஜகவை சேர்ந்த மூத்த அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் மும்பையில் இன்று இரவு இதை அறிவித்தார்.
பாஜக, எஸ்.எஸ்., ஆர்.பி.ஐ, ஆர்.எஸ்.பி மற்றும் பிற கட்சிகள் இணைந்து அமைத்துள்ள இந்த கூட்டணிக்கு மகா யூடி (கிராண்ட் கூட்டணி) என்று பெயரிடப்பட்டுள்ளதாக செய்திக்குறிப்பு மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் கூட்டு அறிக்கை மூலம் விரைவிலேயே, தொகுதி பங்கீடு பற்றி அறிவிக்க உள்ளனர் என்றும் பாட்டீல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இரு கட்சிகளுமே கொள்கை அளவில் ஏறத்தாழ ஒரே மாதிரியானவைதான். எனவே எப்போதுமே மகாராஷ்டிராவில் இணைந்தே செயல்பட்டன. ஆனால், 25 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக, 2014 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டன. தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்சினை இதற்கு காரணமாக இருந்தது.
தேர்தல் முடிவில், பாஜக 122 இடங்களையும், சிவசேனா 63 இடங்களையும் வென்றன. எந்தவொரு கட்சியும் தனிப் பெரும்பான்மையை எட்டாத நிலையில், சேனாவும் பாஜகவும் இணைந்து கூட்டணி அரசை அமைத்தன.
இவ்வாண்டு நடைபெற்ற, லோக்சபா தேர்தலின் போது, மகாராஷ்டிராவின் 48 நாடாளுமன்ற இடங்களில், பாஜக 25, மற்றும் சிவசேனா 23 இடங்களில் போட்டியிட்டன.
லோக்சபா தேர்தலுக்கான தொகுதிபங்கீடு அறிவிப்பை வெளியிட்டபோது, முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், சட்டசபை தேர்தலில் இரு கட்சிகளும் 50-50 இடங்களை பகிர்ந்து கொள்ளும் என்று கூறியிருந்தார். எனவே சரிசமமாக சீட்டுகளை பகிர்ந்து கொள்ளுமா? இல்லை பாஜக இப்போதுள்ள பலத்தை மனதில் வைத்து கூடுதல் சீட் கேட்குமா என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரியும். மகாராஷ்டிராவில் அக்டோபர் 21ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.