மகாராஷ்டிராவில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி .. சிவசேனாவை மிரட்டும் அமித்ஷா
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என சிவசேனாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டசபைக்கான பொதுத்தேர்தல் வரும் 21-ந் தேதி நடைபெற உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்னரே மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் தலா 144 தொகுதிகளில் பாஜக-சிவசேனா போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது.
ஆனால் லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியதால் இந்த பார்முலா மாற்றப்பட்டது. பாஜக அதிக இடங்களில் போட்டியிடுவது என முடிவு செய்தது. இதற்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்தது.
இதன்பின்னர் பாஜகவும் கூட்டணி கட்சிகளும் 164 தொகுதிகளிலும் சிவசேனா 124 தொகுதிகளிலும் போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டது. என்னதான் பாஜக, சிவசேனா கூட்டணி அமைத்தாலும் பல தொகுதிகளில் இரு கட்சி வேட்பாளர்களுக்கும் பரஸ்பரம் இரு கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா பேட்டி ஒன்றில் கூறியிருப்பது அம்மாநில அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமித்ஷா டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி:
2014-ல் பாஜக தனித்தே போட்டியிட்டு தனிப் பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்தது. சிவசேனாவுடன் இணைந்து பின்னர் ஆட்சி அமைத்தோம்.
கடந்த 15 ஆண்டுகால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியால் வேளாந்துறை, முதலீடுகள், கூட்டுறவு துறை என அனைத்திலும் முதலிடத்தில் இருந்த மகாராஷ்டிரா மாநிலம் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. கடந்த 5 ஆண்டுகாலத்தில் மகாராஷ்டிராவை மீட்டு 1 முதல் 5 இடங்களுக்குள் அனைத்து துறைகளிலும் கொண்டு வந்திருக்கிறோம். மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், பிரதமர் மோடி ஜோடி மாநிலத்தை வளர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
இந்த மாநிலத்தில் பாஜக அரசு மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட கிடையாது. கடந்த ஆண்டுகளில் விவசாயிகளுக்கு மகாராஷ்டிரா அரசுகள் ரூ1.22 லட்சம் கோடிதான் விவசாயிகளுக்குக் கொடுத்தன. ஆனால் நாங்களோ ரூ.4.78 லட்சம் கோடியை கொடுத்திருக்கிறோம்.
இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் சிவசேனா முன்வைக்கும் துணை முதல்வர் கோரிக்கை குறித்து பரிசீலிப்போம். பாஜக வெற்றி பெற்றால் மீண்டும் தேவேந்திர பட்னாவிஸ்தான் முதல்வராக நீடிப்பார். இவ்வாறு அமித்ஷா கூறினார்.