அதிகரிக்கும் கொரோனா.. 1,305 கட்டிடங்களுக்கு சீல்.. கலக்கத்தில் மும்பை
மும்பை: கொரோனா தொற்று அதிகரிப்பதன் காரணமாக, 1,305 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும், கேரளா, மகாராஷ்டிராவில் தினம் அதிகரிக்கும் தொற்று அந்தந்த மாநில அரசுகளையும், மக்களையும் தொடர்ந்து பதட்டத்திலேயே வைத்துள்ளது.
கேரளாவில் தினமும் சராசரியாக 4000 - 5000 பேருக்கு கொரோனா தொற்றும், மகாராஷ்டிராவில் தினம் 5000 - 6000 பேருக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டு வருகிறது. கொரோனாவை விரட்டுவதற்காக இந்தியாவில் கோவோக்சின் மற்றும் கோவிஷில்டு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. எனினும், இவ்விரு மாநிலங்களில் தொடர்ந்து பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், மும்பை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்பையில் 2,749 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், 1,305 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்ட கட்டிடங்களில் 71,838 மக்கள் வசித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா ஆட்டம் அதிகம்.. 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உடனே தடுப்பூசி போடுங்க.. மகாராஷ்டிரா கோரிக்கை!
புதிதாக 823 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த டிசம்பர் முதல் ஒரே நாளில் அதிகம் பதிவான பாதிப்புகள் இதுவேயாகும். இதன் மூலம், மொத்த கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை 3,17,310 ஆக உயர்ந்தது, அதே நேரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11,435-ஆக அதிகரித்துள்ளது.