ஊரடங்கில் உதயமாகும் தலைவன்... துணிக்கடைக்காரர் மகனின் மனிதநேயம்... இது சோனு சூட் கதை
மும்பை: ஊரடங்கால் திக்கு தெரியாமல் தவித்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை ஆபத்பாந்தவனாக மீட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை தனது சொந்த நிதியில் செய்து வருகிறார் பாலிவுட் நடிகர் சோனு சூட்.
அரசு நிர்வாகம் செய்ய வேண்டிய பணிகளை தனி ஒரு ஆளாக செய்து, தனது உயர்ந்த எண்ணத்தையும், தாராள மனதையும் உலகமறியச் செய்துள்ளார் இவர்.
குரலற்றவர்களின் குரலாகவும், ஆதரவற்றவர்களின் அரணாகவும் செயல்படும் சோனு சூட் யார் என்பது குறித்தும், அவரது பின்னணி என்ன என்பது பற்றியும் விவரிக்கிறது இந்த தொகுப்பு.
நாள் குறித்த ராணுவம்.. லடாக் எல்லையில் "லெப்டினன்ட் ஜெனரல்" அதிகாரிகள் மீட்டிங்.. முக்கிய திருப்பம்!
துணிக்கடைக்காரர்
பஞ்சாப் மாநிலம் மொகாவை சேர்ந்த ஒரு சிறிய துணிக்கடைக்காரரின் மகன் தான் இந்த சோனு சூட். மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூருக்கு பொறியியல் படிப்பதற்காக சென்ற இவர், மாடலிங் பக்கம் ஆர்வம் கொண்டு நடிகராக உருவெடுத்து இன்று தலைவனாகவும் உருவெடுத்து வருகிறார். எப்படி என்று கேட்கிறீர்களா, ஊரடங்கால் வறுமையில் சிக்கித்தவிக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கணக்கு வழக்கு பாராமல் தனது சொந்த நிதியை செலவழித்து அவர்களின் மனதை வென்றிருக்கிறார்.
மனது வேண்டும்
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன் களப் பணியாளர்களான மருத்துவத்துறையினர், துப்புரவுப் பணியாளர்கள் தங்கி கொள்வதற்காக தனக்கு சொந்தமான 4 மாடி விடுதியை இலவசமாக கொடுத்துள்ளார் சோனு சூட். விமானத்தை ஆகாயத்தில் மட்டுமே பார்த்தவர்களை, அதற்குள் அமரவைத்து பறக்க வைத்துள்ளார் இவர். கொச்சினில் இருந்து 177 தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊரான ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரில் சேர்ப்பதற்காக தனி விமானத்தை ஏற்பாடு செய்து கொடுத்தார்.
சொந்த ஊர்களுக்கு
அரசும், அரசியல் கட்சிகளும் செய்ய வேண்டிய மீட்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் தனி ஒரு ஆளாக நின்று களமாற்றி வருகிறார் சோனு சூட். புலம்பெயர் தொழிலாளர்களுக்காக கால் சென்டர் அமைத்து அதில் அவர்கள் கேட்கும் உதவிகளை தட்டாமல் செய்து வருகிறார். மும்பையில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை தனது சொந்த நிதியை கொண்டு அவர்களது சொந்த மாநிலங்களான பீகாருக்கும், உத்திரபிரதேசத்துக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
கொண்டாடும் மக்கள்
சோனு சூட்டை திரையில் வில்லனாக மட்டும் பார்த்த மராட்டிய மக்கள் இன்று அவரை கொண்டாடுகின்றனர். இதனிடையே சோனு சூட் இந்தளவிற்கு உதவிகள் செய்கிறார் என்றால் வறுமையின் வலியை அவர் உணர்ந்ததே காரணம் எனக் கூறுகிறார் அவரது சகோதரி மால்விகா சூட். இது தொடர்பாக அவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், '' எனது அப்பா அம்மா மீது அதிக பாசமும், மரியாதையும் கொண்டவர் சோனு சூட். இவர் நாக்பூரில் இன்ஞ்னியரிங் படித்த போது அப்பாவின் கஷ்டங்களை உணர்ந்திருந்தார்.''
குறுகிய அறை
மேலும் தொடர்ந்து கூறிய அவர், ''சோனு நாக்பூரில் இருந்து ஊருக்கு வரும்போதெல்லாம் ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் கழிவறை அருகே கூட்ட நெரிசலில் நின்று கொண்டு வருவார். வறியவர்களின் வலியை அப்போதே அவர் உணர்ந்துவிட்டார். அதேபோல், தொடக்கக்காலத்தில் மும்பையில் திரும்பிப்படுக்க கூட முடியாத அளவிற்கு குறுகிய அறையில் தான் அவர் தங்கியிருந்தார். தொழிலாளர்கள் படும் சிரமங்களை அவர் அனுபவித்திருக்கிறார். இவைகளை எல்லாம் அவர் எப்போதும் மறக்கமாட்டார்''
வெற்றிபெற்ற மனிதனல்ல
மேலும், ''எங்கள் அம்மா அடிக்கடி எங்களிடம் சொல்லியது, '' வாழ்க்கையில் யாருக்குமே உதவ முடியாவிட்டால் நீங்கள் இன்னும் வெற்றிபெற்ற மனிதர் அல்ல என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்'' என்பது தான். இன்று அம்மா, அப்பா உயிருடன் இல்லை என்றாலும் அவர்கள் கூறிய போதனைகளும், ஊட்டி வளர்த்த மனிதநேயமும் இன்னும் எங்களிடம் உள்ளன'' என பெருமிதம் தெரிவிக்கிறார் சோனு சூட் சகோதரி மால்விகா சூட்.
திரையுலகம்
திரையுலகில் உச்ச நட்சத்திரங்களாக பவனி வரும் பலர் செய்யாததை இவர் செய்திருக்கிறார். இதற்காக இவரை மஹாராஷ்டிரா மாநில ஆளுநர் கோஷ்யாரி நேரில் அழைத்து பாராட்டி புகழாரம் சூட்டியுள்ளார். இதனிடையே சோனு சூட் எந்த அரசியல் கட்சியிலும் இணையப் போவதில்லை என அவரது சகோதரி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.