மராத்தா சமூகத்துக்கான இடஒதுக்கீட்டை ஏற்றது மும்பை ஹைகோர்ட்!
மும்பை: மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மகாராஷ்டிரா அரசின் பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் பரிந்துரையை மும்பை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதேநேரத்தில் மராத்தா சமூகத்தினருக்கான 16% இடஒதுக்கீட்டை 12-13% என குறைத்திருக்கிறது.
மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்றன. இதனையடுத்து அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மராத்தா சமூகத்தினருக்கு 16% வழங்கலாம் என பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் பரிந்துரைத்தது. இதை ஏற்று மகாராஷ்டிரா அரசும் சட்டத்தை நிறைவேற்றியது.
மகாராஷ்டிராவில் ஏற்கனவே 52% இடஒதுக்கீடு அமலில் இருந்தது. இப்புதிய அறிவிப்பால் இடஒதுக்கீடு 68% ஆகமாக அதிகரித்தது.
இதற்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதே நேரத்தில் ஆதரவாகவும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
மாநிலங்களில் இடஒதுக்கீடு 50%-க்கு மேலே இருக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் மகாரஷ்டிரா அரசு சட்டம் பிறப்பித்திருப்பதாக மனுக்களில் சுட்டிக்காட்டப்பட்டன. இம்மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ரஞ்சித் மோரே மற்றும் பாரதி தாங்ரே ஆகியோர் அடங்கிய பெஞ்ச் மகாராஷ்டிரா அரசின் இடஒதுக்கீடு அறிவிப்பு செல்லும் என தீர்ப்பளித்தனர்.
Maharashtra CM Devendra Fadvanis in the state assembly on Maratha reservation: Bombay HC accepted the report of the Backward Class Commission, and also that 50% cap on reservation can be exceeded in exceptional situations. (File pic) pic.twitter.com/mLh34gdebQ
— ANI (@ANI) June 27, 2019
அதே நேரத்தில் மராத்தா சமூகத்தினருக்கு 16% இடஒதுக்கீடு என்பதை 12 முதல் 13% இடஒதுக்கீடு வழங்கலாம் எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் பரிந்துரைகளை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
தவிர்க்க இயலாத சூழல்களில் இடஒதுக்கீடு 50%-க்கும் அதிகமாகவும் இருக்கலாம் எனவும் தீர்ப்பளித்துள்ளனர் என்றார்.