கண்ணை மூடி தவம்.. கடித்து குதறிய சிறுத்தை.. துறவியின் பரிதாப முடிவு
காட்டில் தவம் செய்த புத்த துறவியை சிறுத்தை கொன்றது.
மும்பை: நடுக்காட்டில் தவம் செய்து கொண்டிருந்த ஒரு துறவியை சிறுத்தை கடித்து குதறி எடுத்து கொன்றே விட்டது!!
மஹாராஷ்டிரா மாநிலம் சந்திரப்பூர் மாவட்டத்தில் ராம்தேகி என்ற ஒரு காடு உள்ளது. இந்த காட்டில் நிறைய வனவிலங்குகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது நாக்பூரிலிருந்து 150 கி,மீ, தொலைவுக்கு தள்ளி உள்ளது. இந்த காட்டுக்கு நடுவில் ஒரு புத்த மத கோயில் உள்ளது. அதனால் புத்த துறவிகள் மட்டும் இங்கு அடிக்கடி வந்து போவார்கள்.
மரத்தடியில் தவம்
இப்படித்தான் போன மாசம் ராம் வால்கே என்ற ஒரு புத்த துறவி இந்த கோயிலுக்கு போனார். அவருக்கு 35 வயது இருக்கும். அந்த காடு, கோயில் என எல்லாமே இவருக்கு ரொம்ப பிடித்து விட்டது. அதனால் கோயிலுக்கு போய் திரும்பி வந்துவிடலாம் என்று நினைத்தவர், அங்கேயே ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு தவம் செய்ய ஆரம்பிச்சிட்டார்.
அதிகாரிகள் எச்சரிக்கை
அதனால் அவருக்கு சாப்பாடு மட்டும் 2 துறவிகள் வந்து கொடுத்து விட்டு போவார்கள். துறவி காட்டுக்குள் தவம்செய்வதை கேள்விப்பட்ட வனத்துறை அதிகாரிகள், நிறைய விலங்குகள் இங்கு நடமாடுவதால், தவம் செய்ய வேண்டாம், ரொம்பவும் ஆபத்து என்று எச்சரித்தார்கள்.
சிறுத்தை பாய்ந்தது
ஆனாலும் துறவி கேட்கவே இல்லை. இன்னும் கொஞ்ச நாள் மட்டும் தவம் செய்துவிட்டு போய்விடுகிறேன் என்று சொல்லி மீண்டும் தவத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் கடந்த 11-ம் தேதி அந்த காட்டில் நடமாடிய சிறுத்தை ஒன்றின் கண்ணில் துறவி பட்டுவிட்டார்.
கடித்து குதறியது
துறவியை பாய்ந்து தாக்கிய சிறுத்தை, அவரை கடித்து குதறியது. இதில் துறவி தவம் செய்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து புத்த கோயிலுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும்தான் துறவிகள் வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த கோயிலில் சோலார் மின்வேலியும் அமைத்துள்ளார்கள்.
2 துறவிகள் எங்கே?
ஆபத்தான பகுதி என்ற எச்சரிக்கையையும் மீறி காட்டுக்குள் சென்றுள்ளதாக தெரிவித்த போலீசார், அப்பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் நடந்த 5-வது தாக்குதல் சம்பவம் இது எனவும் தெரிவித்தனர். துறவிக்கு சாப்பாடு தந்த மற்ற 2 துறவிகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.