மும்பையில் இடிந்து விழுந்தது 4 மாடி கட்டடம்.. 12 பேர் பலி.. 40 பேர் சிக்கியுள்ளதால் பரபரப்பு
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சற்று முன்னதாக 4 மாடி கட்டடம் ஒன்று இடிந்த விழுந்தது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் 40 பேர் சிக்கியுள்ளதால் அவர்களின் நிலை குறித்து மக்களிடையே அச்சம் நிலவுகிறது
மும்பையின் டோங்கிரி பகுதியில் தண்டல் என்ற தெருவில் 15 குடும்பங்கள் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். சேசாபாரி பெயரில் நீண்ட பழையமான அந்த 4 மாடி கட்டடம் இன்று காலை திடீரென இடிந்து விழுந்து நொறுங்கியது.
இதைபார்த்து அதிரச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் இந்த அந்த இடத்திற்கு தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினரால் உடனடியாக வர இயலவில்லை. விபத்து நடந்துள்ள தண்டல் தெரு மிக குறுகலான தெரு என்பதால் வாகனங்களுடன் உள்ளே நுழைய முடியவில்லை.
இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டடத்திற்குள் 50 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் அவர்களை உடனடியாக உயிருடன் மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீயணைப்பு படையினருடன் வந்தனர். அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சற்று முன்பு வரை 12 பேர் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்து இருப்பதை மீட்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர். அவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இதனிடையே இன்னும் 40 பேர் காயங்களுடன் உள்ளே சிக்கியிருப்பதால் அவர்களின் நிலை குறித்து இதுவரை தெரியவரவில்லை.
இதனிடையே பழைய மற்றும் பாழடைந்த கட்டடங்களை சீரமைக்க போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என மகாராஷ்டிரா வீட்டுவசதி மற்றும் பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் மீது அதிகாரிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.