இஸ்லாமிய பெண்களுக்கு புர்கா பரிசளித்த பாஜக-வினர்.. மும்பையில் வழங்கப்பட்ட ரமலான் பரிசு
மும்பை: ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய பெண்களுக்கு புர்கா உள்ளிட்ட பொருட்களை, பரிசாக வழங்கிய பாஜக-வினரால் மும்பையில் வியப்பு ஏற்பட்டது.
இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஈஸ்டர் தின தொடர் குண்டுவெடிப்பை அடுத்து பொது இடங்களில் இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிவதை தடை செய்ய வெண்டும் என, கடந்த மாதம் பாஜக கூட்டணியை சேர்ந்த சிவசேனா கட்சி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.
இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் கடந்த மாதம் தலையங்கம் ஒன்று வெளியானது. அதில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் புர்காவை பொது இடங்களில் அணிவதை தடை செய்ய, பிரதமர் மோடி முன்வர வேண்டும்.
இலங்கையை பின்பற்றி பொது இடங்களில் பர்தா அணிவதற்கு, இந்திய அரசும் தடை விதிக்க வேண்டும் என சிவசேனா கருத்து தெரிவித்திருந்தது. மேலும் முத்தலாக் மட்டுமே தடை செய்யப்பட வேண்டியது அல்ல, பர்தா அணிவதும் தடை செய்யப்பட வேண்டிய ஒன்று என கூறியிருந்தது தேசியளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் பாஜக-வினர் ரமலான் பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமிய பெண்களுக்கு வழங்கிய பரிசுப் பொருட்களில் புர்காவும் இடம்பெற்றிருந்தது பல்வேறு தரப்பினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. மும்பை பாஜக சிறுபான்மையினர் நிர்வாகிகள் தலைமையில், ரமலான் பண்டிகையை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சுமார் 1000 இஸ்லாமிய பெண்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
ரமலான் பரிசு என்ற பெயரில் வழங்கப்பட்ட இந்த பொருட்களில், புர்காவும் இடம் பெற்றது. இது குறித்து பேசிய பாஜக நிர்வாகிகள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய இஸ்லாமிய பெண்களிடம் நேரடியாக நாங்கள் பேசினோம். அப்போது பலர் தங்களது வறுமையை மறைப்பதற்காகவே புர்காவை அணிவதாக வேதனையுடன் கூறினர். வேலைக்கு செல்லும் பல இஸ்லாமிய பெண்களால் நல்ல உடைகளை வாங்க முடிவதில்லை என தெரிய வந்தது.
அவர்கள் கிழிந்த அல்லது பழைய உடைகளையே அணிந்து பணிக்கு செல்கின்றனர். அதனை மறைப்பதற்காகவே புர்காவையும் அணிந்து செல்கிறார்கள் என்பதை அறிந்து வேதனை அடைந்தோம்.அதனால் தான் ரமலான் பரிசில் இஸ்லாமிய பெண்களுக்கான புர்காவையும் நாங்கள் வழங்கினோம் என பாஜக சிறுபான்மையினர் நிதி மேம்பாட்டு வாரிய தலைவர் ஹைதர் அசாம் கூறினார்.
புர்கா அணிவது பாதுகாப்பிற்கு எந்த வகையிலும் அச்சுறுத்தலாக அமையாது. மாறாக புர்கா அணிந்தால் இஸ்லாமிய பெண்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுகிறது என்றார். இஸ்லாமிய பெண்களுக்கு ரமலான் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்ட நிகழ்ச்சியில், மும்பை பாஜக தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஆஷிஷ் ஷெலாரும் பங்கேற்றார்.