ஒரு ரெகமண்டேசன் மெயில் கூட அனுப்பியதில்லை.. பிறர் கருத்துக்கும் மதிப்பு.. அதுதான் அசிம் பிரேம்ஜி
மும்பை: அசிம் பிரேம்ஜி.. இந்த பெயரை கேட்டறியா மக்கள் இந்தியாவில் சொற்பம்தான். முகேஷ் அம்பானிக்கு பிறகு, இந்தியாவின் 2வது மிகப்பெரிய செல்வந்தரான அசிம் பிரேம்ஜியின், சொத்து மதிப்பு, 21 பில்லியன் அமெரிக்க டாலராகும்.
விப்ரோ நிறுவனர் மற்றும் தலைவர் என்ற அந்தஸ்தில் கோலோச்சிய அசிம் பிரேம்ஜி, பிறந்து வளர்ந்தது, படித்தது எல்லாமே மும்பையில். பெங்களூரை தலைமையிடமாக கொண்டு விப்ரோ நிறுவனத்தை இவர் தொடங்கியபோது, இந்திய தகவல் தொழில்நுட்ப துறையும் சர்வதேச அளவில் தலை நிமிர்ந்தது.
பெங்களூரை சேர்ந்த மற்றொரு இந்திய நிறுவனமான இன்போஃசிஸ்தான் விப்ரோவுக்கு கடும் போட்டியாளராக பார்க்கப்பட்டபோதிலும், இன்போஃசிஸ் தலைவர் நாராயணமூர்த்தியுடன், அசிம் பிரேம்ஜி கொண்டிருந்த நட்பு தொழில்துறையினருக்கு ஒரு கையேடு என்றால் மிகையில்லை.
ஏன் இன்விடேஷன் தரலை.. மேடையில் வைத்து ஜெயக்குமாருடன் மோதிய அதிமுக மா.செ.
ஓய்வு பெறும் அசிம் பிரேம்ஜி
53 வருட காலம், விப்ரோவை இயக்கும் இன்ஜினாக செயல்பட்ட அசிம் பிரேம்ஜி, ஜூலை 31ம் தேதியோடு, நிறுவனத்தின், செயல் சேர்மன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதேநேரம், நிறுவன தலைவர் பதவியில் தொடருவார். அசிம் பிரேம்ஜி மகன் ரிஷத் பிரேம்ஜி, ஜூலை 31ம் தேதி முதல், நிறுவனத்தின் செயல் தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.
விப்ரோ நன்மதிப்பு
"30 வருடங்களுக்கு முன்பாக ஒரு இளம் இன்ஜினியராக, நான் விப்ரோவில் இணைய காரணம், 1980களின் நிறைவுபகுதியில், விப்ரோவுக்கு இருந்த நற்பெயர்தான். அப்போது தனியார் நிறுவனங்கள் பெரும்புகழோடு இயங்கியது குறைவுதான். அதில் விப்ரோ முன்னோடி. இத்தனை வருடங்களாக நான் விப்ரோவில் பணியாற்றிய பிறகு சொல்கிறேன், அசிம் பிரேம்ஜி இந்த நிறுவனத்தை, மிகச்சிறப்பாக கட்டமைத்துள்ளார்" என்கிறார், அசிம் பிரேம்ஜி பவுண்டேசன், செயல் தலைவர் அனுராக் பெகர்.
ஒரே கவனம்
"அசிம் பிரேம்ஜி, அரிதான திறமையை பெற்றிருந்தார். வெற்றி பெறும்வரை, ஒரே குறிக்கோளை நோக்கியே அவரது கவனம் முழுக்க இருக்கும்" என்று புகழ்ந்துரைக்கிறார், விப்ரோ நிறுவனத்தில் நீண்ட காலமாக தலைமை ஹெச்.ஆர் பணியிலிருந்த ரஞ்சேகர். மேலும் அவர் கூறிய ஒரு நிகழ்வு சுவாரசியமானது. "43 வருட எனது பணி அனுபவத்தில், ஒருமுறை கூட, குறிப்பிட்ட நபருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று அசிம் பிரேம்ஜி எனக்கு சிபாரிசு கடிதம் அனுப்பியதில்லை" என்றார் ரஞ்சேகர்.
கருத்துக்கு மதிப்பு
1981ம் ஆண்டு விப்ரோ கேம்பஸ் நேர்காணலில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர், கே.கே.நடராஜன். இப்போது மைன்ட்ரீ நிறுவன சேர்மேனாக உள்ளார். அவர், அசிம் பிரேம்ஜி பற்றி கூறுகையில், பணியில் மிகவும் கவனத்தோடு இருப்பவர் அசிம் பிரேம்ஜி. பிறரது கருத்துக்களுக்கும் மதிப்பு கொடுப்பார். அசிம் பிரேம்ஜி முடிவுக்கு மாறாக கருத்து சொல்ல பிறருக்கும் உரிமை தரப்பட்டது. பொது இடத்தில் கூட அதை சொல்ல முடியும். ஆனால், ஒருமுறை முடிவை எடுத்துவிட்டால், அதன்பிறகு, அதுபற்றி ஆலோசிக்க மாட்டார் என்றார்.