முடிந்தால் மீண்டும் 370 சட்டப்பிரிவை கொண்டு வாருங்கள்.. பார்க்கலாம்.. காங்கிரசுக்கு மோடி மாஸ் சவால்
காஷ்மீரில் மீண்டும் சட்டப்பிரிவு 370 ஐ கொண்டுவருவோம் என்று காங்கிரஸ் கட்சியால் வாக்குறுதி அளிக்க முடியுமா என்று பிரதமர் மோடி சவால்விட்டுள்ளார்.
மும்பை: காஷ்மீரில் மீண்டும் சட்டப்பிரிவு 370 ஐ கொண்டுவருவோம் என்று காங்கிரஸ் கட்சியால் வாக்குறுதி அளிக்க முடியுமா என்று பிரதமர் மோடி சவால்விட்டுள்ளார்.
மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் இந்த மாதம் 21ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. மேலும் 24ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக கட்சிகள் எல்லாம் தற்போது மிக தீவிரமாக தயாராகி வருகிறது.
லோக்சபா தேர்தலுக்கு பின் இந்த தேர்தல் நடப்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பாஜகவின் 100 நாள் ஆட்சிக்கு மார்க் போடும் தேர்தலாக இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று மஹாராஷ்டிராவில் பிரச்சாரம் செய்தார்.
என்ன சொன்னார்
பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தில், கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி நாம் ஒரு விஷயத்தை செய்தோம். எல்லோரும் முடியாது என்று நினைத்த விஷயத்தை நாம் செய்தோம். நாம் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கினோம். இதனால் அப்பகுதி மக்கள் மற்ற இந்தியா போல மிக வேகமாக வளர முடியும்.
காஷ்மீர் நிலை
ஜம்மு காஷ்மீர் என்பது வெறும் நிலம் கிடையாது. அது நம்முடைய மகுடம். காஷ்மீரில் முழுமையான அமைதி திரும்ப நாங்கள் முயன்று வருகிறோம். அங்கு 4 மாதங்களுக்குள் அமைதி திரும்பி விடும். அதற்கும் மேல் ஆகாது.
சிவாஜி மண்ணில் சவால்
சத்திரபஜி சிவாஜி மண்ணில் இருந்து நான் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு சவால் விடுகிறேன். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன. உங்களால் உங்கள் நிலைப்பாட்டை தெளிவாக, பயம் இல்லாமல் தெரிவிக்க முடியுமா? சொல்லுங்கள்.
உங்களால் முடியுமா?
உங்களுக்கு தைரியம் இருந்தால், உங்கள் தேர்தல் பிரச்சாரத்தில், உங்களின் தேர்தல் அறிக்கையில் நீங்கள் காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்குவோம் என்று கூறுங்கள் பார்க்கலாம். மீண்டும் சட்டப்பிரிவு 370ஐ கொண்டு வருவோம் என்று கூறுங்கள் பார்க்கலாம். முடிந்தால் நீங்கள் மீண்டும் சட்டப்பிரிவு 370ஐ கொண்டு வாருங்கள் பார்க்கலாம், என்று சவால் விட்டுள்ளார்.