மும்பை விமான நிலைய மேம்பாட்டு பணிகளில் ஊழல்.. ஜிவிகே ரெட்டி மீது பாய்ந்தது சிபிஐ வழக்கு
மும்பை: மும்பை சர்வதேச விமான நிலைய மேம்பாட்டுக்கான திட்டத்தில் ரூ. 750 கோடிக்கு ஊழல் செய்ததாக ஜிவிகே குழுமத்தின் தலைவர் ஜிவிகே ரெட்டி மற்றும் அவரது மகன் சஞ்சய் ரெட்டி மீது சிபிஐ போலீசார் இன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.
மும்பை விமான நிலையத்தை ஜிவிகே குழுமம் கையாண்டு வருகிறது. இந்த விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள், நவீனப்படுத்துதல் என்று அனைத்துப் பணிகளையும் இந்தக் குழுமம்தான் கையாண்டு வருகிறது.
இந்த விமானத்தின் மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டபோது, ரூ. 750 கோடிக்கு ஊழல் நடந்ததாக, ஜிவிகே குழுமத்தின் தலைவர் டாக்டர் ஜிவிகே ரெட்டி, இவரது மகன் சஞ்சய் ரெட்டி மற்றும் சில அரசு பணியாளர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.
இந்த வகையில் ஜிவிகே ரெட்டி அவரது மகன் சஞ்சய் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. சிபிஐ தனது வழக்குப் பதிவில், போலி வேலையாட்கள் ஒப்பந்தங்கள் மூலம் பணம் கையாடல் செய்தது, இந்த கையாடலுக்கு விமான நிலைய வருமானத்தை பயன்படுத்தியது, செலவை அதிகரித்துக் காட்டியது, இருப்புகளை தவறாக பயன்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் ஜிவிகே ரெட்டி மற்றும் அவரது மகன் மீது வழக்குப் பதிவு செய்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
கடந்த 2017-2018ஆம் ஆண்டுகளில் விமான நிலையத்தின் மேம்பாட்டுக்கு என்று ரூ. 350 கோடிக்கு ஒன்பது நிறுவனங்களுடன் மும்பை சர்வதேச விமான நிலைய லிமிடெட் ஒப்பந்தம் செய்ததாக கணக்கில் காட்டியுள்ளது. ஆனால், இந்த பணிகள் நிறைவேற்றப்படவில்லை. அரசிடம் இருந்து வரிச் சலுகை பெறுவதற்காக ஜிவிகே குழுமம் இவ்வாறு நடந்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இத்துடன் மும்பை விமான நிலைய லிமிடெட்டில் இருந்து கிடைத்த வருமானத்தை கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து ஜிவிகே குழுமம் தனது வேறு நிறுவனங்களுக்கு மாற்றி இருப்பதும் தெரிய வந்துள்ளது. அப்படி பயன்படுத்திய பணத்தின் மதிப்பு ரூ. 395 கோடி என்று தெரிய வந்துள்ளது. ரூ. 100 கோடி அளவிற்கு செலவினங்களை ஜிவிகே குழுமம் அதிகரித்து காண்பித்துள்ளது.
ஜார்க்கண்ட் கொரோனா போர்க்களத்தில் தீரமுடன் பணியாற்றும் 42,000 'சாஹயாக்கள்'
மேலும், மும்பை விமான நிலையத்தில் இருக்கும் முக்கிய இடங்களை தங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் நடத்தும் நிறுவனங்களுக்கு குறைந்த விலைக்கு ஜிவிகே குழுமம் கொடுத்துள்ளது. இதன் மூலம் விமான நிலையத்தில் இருந்து குறைந்த வருமானம் கிடப்பது போல் ஜிவிகே குழுமம் காண்பித்துள்ளது.
மும்பை விமான நிலையத்தின் பங்குகளில் 50.5% பங்குகளை ஜிவிகே நிறுவனம் வைத்துக் கொண்டுள்ளது. மீதமுள்ள பங்குகளை இந்திய விமான நிலைய ஆணையம் வைத்துக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.